டிவி 9 தொலைக்காட்சியை சன் டிவி வாங்குகிறதா?: தவறான செய்தி!
ஹைதரபாத்தைச் சேர்ந்த அசோசியேட்டட் பிராட்காஸ்டிங் (ABCL) நிறுவனத்துக்குச் சொந்தமானது TV9. இந்த நிறுவனம் தெலுங்கில் இரண்டு செய்தி சேனல்களையும், கன்னடம், மலையாளம், குஜராத்தி, மராத்தி, வங்காளம் மற்றும் ஆங்கிலத்தில் ஒரு சேனல் என மொத்தம் 8 செய்தி சேனல்களை இயக்கி வருகிறது.
மிகப் பரபரப்பான செய்திகளுக்கு பெயர் போனது TV9. ஆந்திராவிலும் கர்நாடகத்திலும் நம்பர் 1 செய்தி சேனலாக டிவி9 விளங்குகிறது.
இந்த நிறுவத்தின் பெரும்பாலான பங்குகளை ஸ்ரீனி ராஜூ வைத்துள்ளார். மேலும் சைஃப் பார்டனர்ஸ் நிறுவனத்திடம் 20 சதவீத பங்குகள் உள்ளன.
இந் நிலையில் இந்த நிறுவனத்தை ரூ. 150 கோடிக்கு விலைக்கு வாங்க சன் டிவி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், இதை சன் டிவி திட்டவட்டமாக மறுத்துள்ளது. இந்த செய்தி முழுக்க முழுக்க தவறானது என்று சன் குழுமத்தின் தலைமை நிதி அதிகாரியான எஸ்.எல்.நாராயணன் கூறியுள்ளார்.
அதே போல ஸ்ரீனி ராஜுவும் இந்த செய்தியை மறுத்துள்ளார். டிவி 9 நிறுவனத்தை வாங்க சன் டிவி என்னிடம் பேசவும் இல்லை, நான் இதை விற்கும் திட்டத்திலும் இல்லை என்றார்.
ரூ. 16,000 கோடி மதிப்புள்ள சன் டிவி குழுமத்திடம் தென் இந்தியாவில் 32 சேனல்கள் உள்ளன. கடன் ஏதும் இல்லாத இந்த நிறுவனத்திடம் இந்த ஆண்டு மார்ச் மாத கணக்குப்படி ரூ. 416 கோடி கையிருப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.