கருப்பின பெண் அமைச்சரை 'ஒராங்குட்டான்' என்று அழைத்த இத்தாலிய செனடர்
இத்தாலியில் உள்ள நார்தர்ன் லீக் கட்சி தலைவர் ராபர்ட் கால்டிரோலி. செனடரான அவர் இத்தாலிய மேல் சபையின் துணை தலைவர் ஆவார். அவர் தனது கட்சி பேரணியின்போது பேசுகையில், சிசில் கியேங்கேவை பார்க்கையில் ஒரங்குட்டான் மாதிரி அவர் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது என்றார்.
கால்டிரோலியின் இந்த பேச்சுக்கு இத்தாலிய பிரதமர் என்ரிகோ லெட்டா ட்விட்டரில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு என்ரிகோ நார்தர்ன் லீக் கட்சி செயலாளர் ராபர்டோ மரோனியை வலியுறுத்தியுள்ளார்.
48 வயதாகும் ஆப்பிரிக்க நாடான காங்கோவில் பிறந்த அமைச்சர் சிசிலை தரக்குறைவாக பேசிய கால்டிரோலி பதவி விலக வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
புலம்பெயர்பவர்களுக்கு எதிரான கட்சியைச் சேர்ந்தவர் கால்டிரோலி. சிசில் புலம்பெயர்பவர்களுக்கு இத்தாலிய குடியுரிமை எளிதில் கிடைக்க பிரச்சாரம் செய்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.