மணமான மகளையும், அவளது முன்னாள் காதலனையும் கௌரவக்கொலை செய்த குடும்பத்தார் கைது
போபால்: மாண்ட்லா மாவட்டத்தில் ஏற்கனவே மணமான தனது மகளையும், அவளது கள்ளக் காதலனையும் ‘கௌரவக் கொலை' செய்துள்ளனர் அப்பெண்ணின் பெற்றோர்.
மஹிபுரா கிராமத்தைச் சேர்ந்த 21 வயது சுனில் மாரவியும், 19 வயது ரஞ்சிதா பாயும் காதலித்து வந்துள்ளனர். விபரம் அறிந்த ரஞ்சிதாவின் குடும்பத்தினர், அதிவேகமாக ரஞ்சிதாவை கடந்தாண்டு ஜூனில் வேறொருவருக்கு மணமுடித்து வைத்தனர்.
இம்மாதம் 7ம் தேதி பெற்றோரைக் காணப் போவதாகக் கூறி மாமனார் வீட்டில் இருந்து புறப்பட்ட ரஞ்சிதா, 11ம் தேதி தனது பழைய காதலனை சந்தித்துள்ளார். மீண்டும் சேர்ந்து வாழ முடிவெடுத்த காதலர்கள், அதற்கான நடவடிக்கையிலும் இறங்கினர்.
இது குறித்து விபரம் அறிந்த ரஞ்சிதாவின் குடும்பத்தார் அவர்கள் இருவரையும் கௌரவக் கொலை செய்து விட்டனர். நேற்று இவர்களது உடல்கள் கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ரஞ்சிதாவின் தந்தை சடன் மாரவி (45) மற்றும் சகோதரன் மனோஜ் மாரவி மற்றும் மைத்துனர் தினேஷ் மாரவி ஆகியோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காகவும், சமுதாயத்தில் ஒழுக்கத்தை நிலை நாட்டவுமே இக்கௌரவக் கொலைகளை செய்ததாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனராம்.