கோவையில் பயங்கரம்: மும்பை நகை வியாபாரிகளிடம் ரூ.2 கோடி தங்க நகை கொள்ளை
கோவை: கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த மும்பை தங்க நகை வியாபாரிகளிடம் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான 7.2 கிலோ தங்க நகைகள் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது.
மும்பையை சேர்ந்த நகை வியாபாரிகள் நவீன்குமார் ஜெயின் மற்றும் ஜெயின்லால் ஆகிய இருவரும் வியாபாரம் தொடர்பாக பெங்களூர் வந்தனர். பெங்களூரில் கடை வியாபாரத்தை முடித்த பின்பு அங்கிருந்து நேற்று காலை கோவை வந்தனர். கோவையில் உள்ள நகை கடைகளில் ஆர்டர் பெற்று விட்டு நேற்று இரவு கோவை, ராஜவீதியில் உள்ள தனியார் விடுதியில் தங்கினர்.
விற்பனைக்காக கொண்டு வந்த 7.2 கிலோ தங்க நகைகளை அறையில் உள்ள லாக்கரில் வைத்து பூட்டி விட்டு சாப்பிடுவதற்காக இரவு 10 மணி அளவில் சென்றனர். பின்பு 11 மணி அளவில் அறைக்கு திரும்பிய வியாபாரிகள் அறைக்குள் வைக்கப்பட்டு இருந்த ரூ.2 கோடி மதிப்பிலான 7.2 கிலோ தங்க நகைகள் கெள்ளையடிக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து பெரிய கடைவீதி காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கோவை மாநகர போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன், தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பூட்டப்பட்டு இருந்த அறைக்குள் நகைகள் கொளளையடிக்கப்பட்டு இருப்பதால், லாட்ஜ் ஊழியர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனரா அல்லது நகை வியாபாரிகள் நாடகமாடுகின்றனரா என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை நகரில் தொடர்ச்சியாக நகை வியாபாரிகளை குறி வைத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்த காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என நகை வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.