அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை - தமிழகத்திலும் மழை!
சென்னை: அரபிக்கடலில் குறைந்தழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. தென்மேற்கு பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாட்டு மழை மறைவு பிரதேசமாகத்தான் உள்ளது. கேரளா, கர்நாடகாதான் அதிக பலனைப் பெறுகின்றன.
ஆனாலும், தமிழ்நாட்டுக்கு இந்த பருவத்தில் ஓரளவுக்கு மழை கிடைக்கிறது, சமீப நாட்களாக தொடர்ந்து தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இன்றைய வானிலை குறித்து நேற்று சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், "அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. வங்கக்கடலில் மேல் அடுக்கில் சுழற்சி உள்ளது. இந்த இரண்டு காரணங்களால் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனத்தமழை பெய்யும்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று(புதன்கிழமை) சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. மேலும் சென்னையில் மாலை நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது," என்றார்.
கடந்த 24 மணி நேரத்தில் காஞ்சீபுரம் 5 செ.மீ., சென்னை விமானநிலையம், ஸ்ரீபெரும்புதூர், கேளம்பாக்கம், மதுராந்தகம், வால்பாறை, பூண்டி, செங்குன்றம், தாமரைப்பாக்கம், சோழவரம் தலா 3 செ.மீ., செங்கல்பட்டு, செஞ்சி, கல்பாக்கம், மகாபலிபுரம், வால்பாறை, எண்ணூர், செம்பரம்பாக்கம் தலா 2 செ.மீ., தாம்பரம், உத்திரமேரூர், செய்யூர், ஆர்.கே.பேட்டை, திருவள்ளூர், தேவலா, பேராவூரணி, மைலம், திண்டிவனம், சின்னக்கல்லார், சோளிங்கர், திருமயம், ஆலங்குடி, வந்தவாசி, நெய்வேலி தலா 1 செ.மீ. மழை பெய்துள்ளது.