லண்டனில் படித்துவந்த தமிழ் மாணவி தற்கொலை
லண்டன்: இங்கிலாந்தில் படித்துவந்த சென்னையைச் சேர்ந்த 19 வயது மாணவி மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்ஜினா என்ற அந்தமாணவி லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் விமான பராமரிப்பு பொறியியல் கல்வி பயின்று வந்தார். ஜார்ஜினாவின் தந்தை தாம்சன், சென்னை ஜெ.ஜெ.நகர் காவல்நிலைய ஆய்வாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ஜார்ஜினா மரணமடைந்துவிட்டதாக பெற்றோர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
மாணவி ஜார்ஜினா எழுதியதாக கூறப்படும் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்ற விவரம் தெரியவில்லை.
தேர்வில் தோல்வியடைந்ததால் மன வருத்தத்தில் ஜார்ஜினா தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஜார்ஜினாவின் உடலை பெறுவதற்காக தந்தை தாம்சன் மற்றும் உறவினர்கள் இங்கிலாந்து சென்றுள்ளனர். அங்கு அவரது உடலை பெறுவதில் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து லிவர்பூல் நகர காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.