பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ3 லட்சம் இழப்பீடு, மைனர்களுக்கு அமிலம் விற்க தடை- சுப்ரீம்கோர்ட்
டெல்லி: 18 வயதிற்கு குறைவானவர்களுக்கு அமிலம் விற்க கூடாது என்றும், அமில வீச்சால் பாதிக்கப்படுபவர்களுக்கு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நாடு முழுவதும் ஆசிட் விற்பனையை கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 18 வயதிற்கு குறைந்த யாருக்கும் அமிலம் விற்பனை செய்யக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த கட்டுப்பாட்டை மீறி சிறுவர்களுக்கு ஆசிட் விற்பனை செய்தால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. மேலும் அரசு வழங்கிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ஆசிட் விற்க அனுமதி அளிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எம்.லோதா மற்றும் இப்ரஹிம் கலிஃபுல்லா தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று அவர்கள் பிறப்பித்த உத்தரவின் விபரம்
அடையாள அட்டை
சில்லறை விற்பனையாளர்கள் தங்களிடம் ஆசிட் வாங்குவோர் விவரங்களை பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளது. அமிலம் வாங்குவோர் தங்களது புகைப்படம், முகவரி கூடிய அடையாள அட்டையின் நகலைத் விற்பனையாளரிடம் தர வேண்டும்.
அமிலம் விற்பனைக்கு காரணம்
அமில விற்பனையாளர்கள் என்ன காரணத்திற்காக அமிலம் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்தும் அறிந்து பதிவு செய்ய வேண்டும்.
ரூ.3 லட்சம் இழப்பீடு
அமில வீச்சால் பாதிக்கப்படுவோருக்கான செலவை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும். அமில வீச்சில் பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக அதாவது 15 நாட்களுக்குள் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். மீதமுள்ள 2 லட்சம் ரூபாயை 4 மாதங்களுக்குள் வழங்கவேண்டும்.
ஜாமீனில் வெளிவர முடியாது
அமில வீச்சில் ஈடுபடுபவர்கள் கைதாகும் பட்சத்தில் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர். குற்றவாளிகள் சுலபமாக தப்பிக்க கூடாது. அவர் சிறையிலேயே இருக்கவேண்டும். இனியும் அமிலதாக்குதல் நடக்க கூடாது என்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று
இடைக்கால உத்தரவு
இது இடைக்கால உத்தரவுதான். அமில வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக செலவு ஆகும் எனவே வழக்கு நடைபெறும் சமயங்களில் இதனை திருத்திக் கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
தமிழ்நாட்டில் புதிய சட்டம்
பஞ்சாப், ஹரியானா,சிக்கிம் போன்ற மாநிலங்கள் ஏற்கனவே கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழக அரசு அமில வீச்சை கட்டுப்படுத்த 2 நாட்களில் புதிய சட்டம் இயற்றப்படும் என உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உறுதியளித்துள்ளது.