மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் தடை
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதை எதிர்த்து தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த 3 நீதிபதிகளில் தலைமை நீதிபதி அல்டமாஸ் கபூர் மற்றும் நீதிபதி விக்ரம்ஜித் சென் ஆகியோர் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது,
அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுக்கு சேர்த்து பொது நுழைவுத் தேர்வு நடத்துவது இந்திய மருத்துவ கவுன்சிலின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது. மருத்துவ படிப்புகளுக்கு பொதுத் நுழைவுத் தேர்வு நடத்த தேவையில்லை என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்திய மருத்துவ கவுன்சிலும், தனியார் கல்லூரிகளும் பழைய விதிமுறைப்படி மாணவர் சேர்க்கையை நடத்துமாறு அவர்கள் உத்தரவிட்டுள்ளனர். பழைய விதிமுறைப்படி இந்திய மருத்துவ கவுன்சில், மாநில அரசுகள் மற்றும் தனியார் கல்லூரிகள் தனித்தனி தேர்வு நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
பொது நுழைவுத் தேர்வுக்கு மூன்றாவது நீதிபதி அனில் ஆர். தாவே ஆதரவு தெரிவித்தார். இருப்பினும் அதிகபட்சமாக 2 நீதிபதிள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் அவர்களின் தீர்ப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.