வாலி எப்படிய்யா இருக்கார்...? - கவலையுடன் அடிக்கடி விசாரித்த கருணாநிதி!
அதே போல அரசியலுக்கப்பால் கருணாநிதியின் தமிழைச் சிலாகிப்பவர் கவிஞர் வாலி. எம்ஜிஆருக்கு நெருக்கமானவர் என்று வாலி அறியப்பட்டாலும், எம்ஜிஆர் முதல்வராக இருந்த காலத்திலேயே கருணாநிதியுடனும் நல்ல தொடர்பிலிருந்தவர்.
கடந்த திமுக ஆட்சியின்போது திமுகவின் இலக்கிய மேடைகளை அதிகமாக அலங்கரித்தவர் வாலிதான்.
வாலிக்கு இருதய அறுவைச் சிகிச்சை செய்தபோது, அதன் முழுச் செலவையும் ஏற்று, வாலியைக் காப்பாற்றியவர் கருணாநிதிதான். அதனால் அத்தனை மேடைகளிலும், எனக்கு இரண்டாம் முறையாக உயிர்கொடுத்தவர் கலைஞர் என்று தவறாமல் சொல்வார் வாலி.
கவியரங்கங்களில் வாலியின் வார்த்தைச் சிலம்பங்களை அப்படி ரசிப்பார் கருணாநிதி.
அந்த வாலி உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது கருணாநிதிக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட தினசரி வாலியைப் பற்றி அவர் விசாரிப்பது வழக்கமாகிவிட்டது.
"வாலி எப்படிய்யா இருக்கார்?" என கட்சிப் பிரமுகர்களைக் கேட்பதோடு, மருத்துவமனை நிர்வாகிகளிடமும் கேட்டு வந்தாராம் கருணாநிதி. ஆனால் கடைசியில் கருணாநிதியை விட்டுப் பிரிந்தே போய் விட்டார் வாலி.