ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி தினமும் பிராந்தி குடிச்சவர்தானே: ஆந்திர காங். தலைவர் கருத்தால் சர்ச்சை!
ஆந்திர மாநில முதல்வராக இருந்தவர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி. இவர் ஹெலிகாப்டர் விபத்து ஒன்றில் காலமானார். அதன் பின்னர் அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி அரசியலில் தலை எடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சி அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரில் ஜெகன் தனிக் கட்சி தொடங்கினார். அவர் கடந்த ஓராண்டாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் சிறையில் இருந்து வருகிறார்.
இருப்பினும் அவரது சகோதரி ஷர்மிளா, தொடர்ந்து பாதயாத்திரை நடத்தி கட்சி தொண்டர்களை சந்தித்து வருகிறார். அப்படி பாதயாத்திரை சென்ற இடத்தில் பேசிய ஷர்மிளா, ஆந்திர மாநில ஆளும் காங்கிரஸ் அரசு சாராய மாபியாக்களை வளர்த்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்யநாராயணா, உங்க அப்பா வருஷத்துக்கு 365 நாளும் பிராந்தி குடித்தது உங்களுக்கு தெரியுமா? இல்லையா? பாதயாத்திரை போறதுன்னா போங்க.. ஆனால் எப்படி பேசனும்னு முதலில் கற்றுக் கொள்ளுங்கள் என்று சாடியிருந்தார்.
போட்சா சத்யநாராயணாவின் இந்த கருத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்களை கொந்தளிக்க வைத்துள்ளது. அக்கட்சியின் சோபா ஹேமாவதி, லட்சுமி பார்வதி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் தமது கருத்தை சத்யநாராயணனா திரும்பப் பெற்று பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரியுள்ளனர்.
பிரச்சனை எப்படியெல்லாம் வெடிக்குது?