2 ஆண்டு சிறை, ரூ.2.5 லட்சம் அபராதம்... ராகிங் மாணவர்களுக்கு அண்ணா பல்கலை எச்சரிக்கை
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கூறப்பட்டுள்ளதாவது:
மாணவர்கள் ராக்கிங்கை தடுக்க அண்ணா பல்கலைக் கழகம் அதிரடி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக துறைகளான கிண்டி பொறியியல் கல்லூரி, எம்.ஐ.டி., அழகப்பா கல்லூரி, கட்டடவியல் மற்றும் திட்டக்கல்லூரி ஆகிய கல்லூரி வளாகங்களில் ராக்கிங் தடுப்பு உதவி தொலைப்பேசி எண்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்படும்.
அனைத்து அறிவிப்பு பலகைகளிலும், வகுப்பறைகளிலும், விடுதியிலும் ராக்கிங்கில் ஈடுபடுபவர்களுக்கான தண்டனைகள் குறித்த தகவல்கள் வெளியிடப்படும். நான்கு கல்லூரி வளாகங்களிலும் ராகிங் தடுப்பு ரோந்து வாகனம் மூலம் கண்காணிக்கப்படும்.
கல்லூரி வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். மாணவர் விடுதிகளில் 3 ஷிப்டு முறையில் 24 மணி நேர கண்காணிப்பு அமல்படுத்தப்படும். ஒவ்வொரு துறையிலும் 5 பேராசிரியர்கள் அடங்கிய ராக்கிங் தடுப்புக் குழு அமைக்கப்படும். இதுபோல் மாணவர் விடுதிகளிலும் ராக்கிங் தடுப்பு குழுக்கள் அமைக்கப்படும். இதுபோன்ற ராக்கிங் தடுப்பு தீவிர நடவடிக்கையை இணைப்பு கல்லூரிகளும் செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளையும் மீறி ராக்கிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, இரண்டரை லட்சம் வரை அபராதம் மற்றும் கல்லூரியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதோடு வேறு எந்த கல்லூரிகளிலும் சேர முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அண்ணா பல்கலைக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.