கவிஞர் வாலியின் உடல் தகனம்… வானம் செலுத்திய கண்ணீர் அஞ்சலி
சென்னை: உடல்நலக்குறைவால் மரணமடைந்த பிரபல கவிஞர் வாலியின் உடல், பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. வாலியின் மரணத்திற்கு மக்கள் மட்டுமின்றி வானமே கண்ணீர் விட்டு அழுது இறுதி அஞ்சலி செலுத்தியது.
காவிய கவிஞர் என்று திரையுலகினரால் பாராட்ட பெற்றவர் வாலி. கடந்த சில மாதங்களாகவே நுரையீரல் தொற்றால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த மாதம் 14ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில் சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.
இருதினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மீண்டும் மோசமானது. உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டது. சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5.05 மணிக்கு வாலி மரணம் அடைந்தார்.
அவரது உடல் ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூவில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்டு பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
திரையுலக பிரமுகர்களும், அரசியல் கட்சியினரும், பொதுமக்களும் திரண்டு வந்து வாலியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
வாலி உடல், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. மதியம் முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீரென்று பெருமழையாக கொட்டியது. கொட்டும் மழையிலும் கண்ணீருடன் ஏராளமானோர் பெசன்ட் நகர் மின்மயானத்திற்குச் சென்றனர். அங்கு வாலியின் சிதைக்கு மகன் பாலாஜி தீ மூட்ட உடல் தகனம் செய்யப்பட்டது.
காவியக்கவிஞர் வாலியை வானமே கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்தியதாக அனைவரும் தெரிவித்தனர்.