பள்ளி சத்துணவு கூடங்களில் அமைச்சர் வளர்மதி ரெய்டு- 3 பேர் சஸ்பென்ட்
சென்னை: பள்ளி சத்துணவு கூடங்களில் அசம்பாவிதங்கள் தொடரும் நிலையில் சென்னையில் இன்று அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 3 பணியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, ஜார்ஜ் டவுன் மண்ணடி பகுதியில் உள்ள முத்தியால்பேட்டை மேல்நிலைபள்ளியின் சத்துணவுக் கூடத்தில் இன்று சத்துணவுத் திட்ட அமைச்சர் பா.வளர்மதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்கு சத்துணவு சாப்பிடும் பள்ளி மாணவ, மாணவியர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா என்றும், தரமாக உள்ளதா என்றும் அமைச்சர் கேட்டறிந்தார்.
அப்பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் முட்டையின் எண்ணிக்கை, பயனாளிகளின் எண்ணிக்கையை விட குறைவாக இருந்ததை கண்டறிந்த அமைச்சர் அதற்கான விளக்கத்தினை சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையல் உதவியாளரிடம் கேட்டறிந்து, இனி வருங்காலங்களில் இதுபோன்று தவறுகள் நடக்கக்கூடாது என்று கடுமையாக எச்சரித்தார்.
மேலும், திருவெற்றியூர் ஜெய்கோபால் கரோடியா அரசினர் மேல்நிலைப்பள்ளியின் சத்துணவு மையத்தினையும் திடீரென ஆய்வு செய்த அமைச்சர், சத்துணவு மையம் குறித்த நேரத்தில் திறக்கப்படாமலும், சத்துணவு பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வராததையும் கண்டார். இதனால் சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் ஆகியோரை தற்காலிக பணி நீக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு அவர் அறிவுரை வழங்கினார்.