6.5 சதவீத பொளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பே இல்லை!- பிரதமர் மன்மோகன் சிங்
டெல்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பின் (அசோசேம்) ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது:
Dன்னியச் செலாவணி சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுவது கவலை அளிக்கிறது. சந்தையை மீண்டெழச் செய்ய மத்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. குறுகிய கால வட்டி விகிதத்தை ஆர்பிஐ உயர்த்தியுள்ளது. எனினும், நீண்ட கால வட்டி விகிதம் அதிகரிக்கப்படமாட்டாது. நெருக்கடியான நிலை விலகியதும், ஆர்பிஐ விதிக்கும் கட்டுப்பாடுகளிலும் மாற்றம் ஏற்படும்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருவதைத் தடுக்க கொள்கை அளவில் சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். நமது சந்தை பொருளாதாரம், அதன் அடிப்படையில் பலமானதாக உள்ளது.
2012-2013-ம் நிதியாண்டில் நடப்பு கணக்குப் பற்றாக்குறை, உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது.
முதலீட்டை அதிகரிக்க
முதலீட்டை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பல்வேறு திட்டங்கள், சம்பந்தப்பட்ட துறைகளிடமிருந்து உரிய அனுமதி கிடைக்காததால் முடங்கியுள்ளன. அவற்றை விரைவாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வளர்ச்சியை ஊக்குவிக்க அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மிகவும் முக்கியம். ஆந்திரத்திலும், மேற்கு வங்கத்திலும் பெரிய அளவிலான துறைமுகங்கள், நவி மும்பை, ஜுஹு, கோவா, புணே மற்றும் கண்ணூரில் விமான நிலையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சில்லறை வர்த்தகம், சிவில் விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் அன்னிய நேரடி முதலீடு தாராளமயமாக்கப்பட்டுள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் மேலும் சில பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உள்ளோம்.
புதிய வங்கிக் கொள்கை
புதிய வங்கி உரிமக் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தகுதியுள்ளவர்களுக்கு வங்கி தொடங்குவதற்கான உரிமம் வழங்கப்படவுள்ளது. இதற்கான நடவடிக்கையில் ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதாரச் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கான பலன், இந்த நிதியாண்டின் கடைசி 6 மாதங்களில் தெரியவரும்.
சர்க்கரைக்கான கட்டுப்பாடு முழுமையாக விலக்கப்பட்டுள்ளது. யூரியா உர உற்பத்தியில் புதிய கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
வருமான வரி ஏய்ப்புத் தடுப்புச் சட்டம் அமல்படுத்துவது 2 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் மேலும் தெளிவான விதிமுறைகளை வகுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களின் முதலீடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு மட்டும் இந்நிறுவனங்களில் ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுக்க ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் தங்கம் மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் தேவையை குறைக்க வேண்டும். அவற்றின் இறக்குமதியையும் கட்டுப்படுத்த வேண்டும். தங்கம் இறக்குமதியில் அரசு விதித்த கட்டுப்பாட்டுக்கு பலன் கிடைக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஜூனில் தங்க இறக்குமதியில் சரிவு ஏற்பட்டது.
பெட்ரோலியப் பொருள்கள் விற்பனையில் இழப்பை ஈடுகட்டும் வகையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. டீசலில் ஏற்பட்ட இழப்பு லிட்டருக்கு ரூ. 13 என்பதிலிருந்து ரூ. 2-ஆக குறைக்கப்பட்டுவிட்டது.
வளர்ச்சி சாத்தியமில்லை
6.5 சதவீத வளர்ச்சி சாத்தியமில்லை:÷உலக அளவில் பொருளாதார மந்த நிலை தொடரும் நிலையில், இந்த நிதியாண்டில் 6.5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டுவது சாத்தியமில்லை.
கடந்த ஓராண்டாக மிக மோசமான பொருளாதார சூழ்நிலை நிலவுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். இதிலிருந்து விரைவில் மீண்டெழுவோம். பொருளாதாரத்தை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். பொருளாதாரம் மோசமாக இருந்த, கடந்த ஓராண்டை பற்றியே எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். இது மக்களிடையே தவறான பிம்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
2004 முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி விகிதம் சராசரியாக 8.2 சதவீதம் இருந்தது. அதே சமயம் முந்தைய பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் 5.7 சதவீதமாகத்தான் இருந்தது," என்றார்.