பீகார் மதிய உணவில் விஷம்: பள்ளி குழந்தைகள் இறப்பிற்கு நீதி கேட்டு போராடிய 90 பேர் மீது எப்.ஐ.ஆர்
பாட்னா: பீகாரில் மதிய உணவு உட்கொண்ட பள்ளிக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனினும் இந்த சம்பவத்துக்கு நீதி கேட்டுப் போராடிய பொதுமக்கள் 90 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு மதிய உணவு உட்கொண்ட பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டனர். இதில் 23 பள்ளி குழந்தைகள் மரணமடைந்தனர். நாடுமுழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
இந்த சம்பவம் நடந்து 5 நாட்கள் ஆகிறது. தடய அறிவியல் வல்லுனர்கள் சமையலுக்கு பயன்படுத்திய எண்ணெய், உருளைக் கிழங்கு, சோயாபீன்ஸ் ஆகியவற்றை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வறிக்கை வந்தபின் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மதிய உணவின்போது அதனுடன் வழங்கப்பட்ட காய்கறிகளை கொண்டு சமைக்கப்பட்ட துணை உணவை சாப்பிட்ட பின்னர் 55லிருந்து 65 குழந்தைகளின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், அவர்களில் 23 பேர் உயிரிழந்ததாகவும் சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவரான சந்திரசேகர சிங் தெரிவித்துள்ளார்.
அதேசமயம் குழந்தைகள் மரணத்தினால் கொதிப்படைந்த பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராடினர். ராஷ்டிரிய ஜனதா தளம், பாஜக அழைப்பு விடுத்திருந்த பந்த் வன்முறையில் முடிந்தது. பேருந்து எரிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 90 பேர் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் இறப்புக்கு காரணமானவர்களை கைது செய்யாமல் நீதி கேட்டு போராடியவர்கள் மீது வழக்கு போடுவதால் அங்கு பொதுமக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.