சத்தீஸ்கரில் மதிய உணவு உட்கொண்ட 35 குழந்தைகள் வாந்தி, மயக்கம்!... 8 பேர் நிலைமை கவலைக்கிடம்
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மதிய உணவு உட்கொண்ட பள்ளிக்குழந்தைகள் 35 பேர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 8 குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பீகாரில் மதிய உணவு உட்கொண்ட 27 குழந்தைகள் மரணமடைந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். நாடுமுழுவதும் இந்த பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை.
ஆனால் நாடுமுழுவதும் ஆங்காங்கே பல்வேறு மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று மதிய உணவு உட்கொண்ட பள்ளிக்குழந்தைகள் 35 பேர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இவர்களில் 8 குழந்தைகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை.
கோவா மாணவர்கள்
கோவா மாநில தலைநகர் பனாஜியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள உசாகோ என்ற இடத்தில் உள்ள ஒரு உயர்நிலைப்பள்ளியில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 20 குழந்தைகளுக்கு வயிற்று வலி, வாந்தி ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் உடனடியாக பாண்டாவில் உள்ள தொற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.