துறைமுகத்தில் இருந்து தண்டையார் பேட்டை வழியாக குழாய் மூலம் எண்ணெய் எடுத்து வர தடை
சென்னை: சென்னை தண்டையார் பேட்டையில் நிலத்தடி நீரில் கச்சா எண்ணெய் கலந்த விவகாரம் தொடர்பாக துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் எண்ணெய் எடுக்க எண்ணெய் நிறுவனத்திற்கு மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.
சென்னை தண்டையார்பேட்டை டிஎச் சாலை பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதியின் அருகில் உள்ள பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலைக்கு, துறைமுகத்தில் இருந்து குழாய் மூலம் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, நிலத்தடி நீரில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகள் கலந்ததாக கூறப்படுகிறது.
அதனால் அந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர் தீப்பிடித்து எரியும் தன்மையில் உள்ளது.
நிலத்தடி நீரில் நனைத்த துணிகளை பற்றவைக்கும் போது அவை பற்றி எரிவதால் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர். நிலத்தடி நீரில் பெட்ரோல் கலப்பதை தவிர்பதற்கும், சுத்தமான தண்ணீர் வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீரில் பெட்ரோல் கலந்துள்ளதால் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் போதிய தண்ணீர் கிடைப்பதில்லை என்றும் இப்பகுதி நிலத்தடி நீரை பயன்படுத்துவதால் உடல் நலக் குறைவும் ஏற்படுகிறது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.
நிலத்தடி நீரில் எரிபொருள் கலந்துள்ளதால் அதை பயன்படுத்த முடியாத நிலையில் மக்கள் அவதிப்படுவது இது குறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக அதிகாரிகள், எண்ணெய் நிறுவன அதிகாரிகளும், மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளும், தண்டையார் பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான தண்ணீர் கிடைக்க எண்ணெய் நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில்எண்ணெய் கசிவை சரிசெய்ய விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதன் பின்னரே பணியை மீண்டும் தொடரவும் ,பிபிசிஎல் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி, துறைமுகத்தில் இருந்து தண்டையார்பேட்டை வழியாக எண்ணெய் அனுப்பும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். உடனடியாக கசிவுகளை சரிசெய்தால் மட்டுமே மீண்டும் பணிகளை தொடங்க வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கால அளவுடன் கூடிய திட்டத்தை பாரத் பெட்ரோலிய நிறுவனம் சமர்பிக்க வேண்டும் என்றும் வாரியம் குறிப்பிட்டுள்ளது.