டெட்ராய்ட் திவால் அறிவிப்பு சட்டவிரோதம்!- தள்ளுபடி செய்தார் நீதிபதி!
டெட்ராய்ட்: 18 பில்லியன் டாலர் கடன் சுமையால் அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் திவாலாகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது மிச்சிகன் மாநில சட்டத்துக்கு விரோதமானது எனக் கூறி நிராகரித்துவிட்டார் இங்காம் கவுன்ட்டி நீதிபதி.
உலகின் மோட்டார் நகரம் என புகழப்பட்ட டெட்ராய்ட் கடந்த பத்தாண்டுகளில் அதல பாதாளத்துக்குப் போய்விட்டது. நிதிச் சுமை, உற்பத்தி நிறுவனங்கள் முற்றாக வெளியேறியமை, மக்கள் தொகை பாதியாகக் குறைந்தது, நகர் முழுவதும் கைவிடப்பட்ட நிலையில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஆபத்தான கட்டடங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள்... போன்றவற்றால் அந்த நகரம் பெரும் வீழ்ச்சிக்குப் போய்விட்டது.
நிலைமை இன்னும் மோசமாவதைத் தடுக்கும் பொருட்டு, அந்த நகரம் திவாலாகிவிட்டதாக அறிவித்து, நீதிமன்றத்தில் ஆவணங்களைச் சமர்ப்பித்தார் மிச்சிகன் ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகார கெவின் ஓர்.
ஆனால் இந்த மனுவை ஏற்பக மறுத்துவிட்டார் நீதிபதி ரோஸ்மாரி அக்யூலினா.
இந்த மனுவை சமர்ப்பித்தன் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு பலன் கிடைப்பதை சந்தேகத்துக்கிடமாக்கியிருக்கிறது நகர நிர்வாகம். இது மிச்சிகன் சட்டத்துக்குப் புறம்பானது என நீதிபதி தெரிவித்துள்ளார்.
இப்போது நகரத்தின் திவால் அறிவிப்பை ஏற்றால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் ஓய்வூதிய பலன்கள் கிடைக்காமல் போவதோடு, ஏற்கெனவே கடன் கொடுத்த பல்லாயிரக்கணக்கானோரின் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று நீதிபதி தெரிவித்தார்.
ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக மிச்சிகன் அட்டர்னி ஜெனரல் அறிவித்துள்ளார்.
மேலும் அடுத்த 6 மாத காலம் வரை பென்ஷன்தாரர்களுக்குரிய பலன்களைத் தருவோம் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார்.
திவால் அறிவிப்பை நீதிமன்றம் ஏற்றால்தான், நகரத்தின் முக்கிய சொத்துக்களை நிர்வாகம் விற்க ஆரம்பிக்கும். அரசின் உதவியும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.