ரம்ஜான் நோன்பு: ஷார்ஜாவில் 2,000 பேர் பங்கேற்ற ‘கின்னஸ்’ இப்தார் விருந்து
ஷார்ஜா: சார்ஜாவில், கடந்த சனிக்கிழமை மாலை சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் இணைந்து ரம்ஜான் நோன்பின், இப்தார் விருந்து சாப்பிட்டார்கள். கின்னஸ் முயற்சிக்காக மேற்கொள்ளப்பட்டது இந்த விருந்து என்பது குறிப்பிடத்தகுந்தது.
இப்தார் என்பது ரமலான் நோன்பு நோற்கும் இஸ்லாமியர்கள் மாலையில் நோன்பை முடித்துக் கொள்ளும் பொருட்டு உணவு உண்ணும் நிகழ்வை குறிக்கும் நிகழ்வு ஆகும். பொதுவாக நோன்பை முடித்துக் கொள்பவர்கள் ஒன்றாகக் கூடி இவ்வுணவை உண்பது வழக்கம்.
நோன்பு நாட்களில், இது மாலை நேரத்தில் சூரியன் மறைந்த பின்னர் நடைபெறும். நோன்பை முடிப்பதற்கு முதல் உணவாக பேரீச்சம்பழத்தை உண்பார்கள்.
கூட்டு விருந்து ஏற்பாடு...
ஷார்ஜாவில் நடைபெற்ற இந்த இப்தார் விருந்து, ஷார்ஜா நகராட்சி, ஷார்ஜா வணிகம் மற்றும் தொழில் துறை போன்றவை சேர்ந்து உள்ளூர் போலீஸ் துணையுடன் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
600 மீட்டர் மேஜை...
விருந்தில், சுமார் 600 மீட்டர் நீள மேஜையின் மீது, பிரியாணி, பல்வகை கனிகள், பழச்சாறுகள் ஆகியவை பரிமாறப்பட்டன.
எதிர்பார்த்ததை விட அதிகம்...
சனிக்கிழமை மாலை 5.30 மணியில் இருந்தே எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் திரண்டனர். இதனால், மேஜையில் இடம் பிடிக்க போட்டாப் போட்டி ஏற்பட்டது.
கண் கொள்ளாக் காட்சி...
பெண்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டனர். தன் மகனோடு விருந்தில் கலந்து கொண்ட முக்கத்தஸ் குஷி என்ற பெண் இது குறித்து கூறியதாவது, ‘நாடு, இனம் ஆகியவற்றை கடந்து ஆயிரக் கணக்கானவர்கள் இந்த விருந்தில் பங்கேற்றது கண் கொள்ளா காட்சியாக இருந்தது' என்றார்.
கின்னஸ் முயற்சி...
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெறுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இப்தார் விருந்து, கின்னஸீல் இடம் பெறுமா என்பது இன்னும் சிலநாட்களில் தெரிந்து விடும்.