ஸ்மைல் ப்ளீஸ்... சனிக்கிரகத்தில் இருந்து பூமியில் மக்களை போட்டோ எடுத்த ‘கஸ்சினி’ விண்கலம்
நியூயார்க்: சனிக்கிரகத்தில் இருக்கும் கஸ்சினி விண்கலம் மூலம் பூமியில் இருக்கும் மக்களை புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியில் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் வேண்டுகோளுக்கிணங்க லாஸ் ஏஞ்சல்ஸ் மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சில தினங்களுக்கு முன் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் லாஸ் ஏஞ்சல் மக்களுக்கு ஓர் இன்ப அறிவிப்பை வெளியிட்டது. அதில், சனி கிரகத்தில் இருக்கும் விண்கலத்தின் மூலம் பூமியை புகைப்படமெடுக்க இருப்பதாகவும், அதில் பொதுமக்களும் கலந்துக்கொண்டு வானை நோக்கி கை அசைக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தது.
அதற்கிணங்க, லாஸ் ஏஞ்சல்ஸ்சில் மக்கள் பலரும் ஆர்வமுடன் கூடி, விண்ணில் கஸ்சினி விண்கலம் இருக்கும் திசையை நோக்கி கையசைத்து போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர்.
கஸ்சினி விண்கலம்...
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தால் சனி கிரகதிற்கு அனுப்பப்பட்ட விண்கலம் ‘கஸ்சினி'. தற்போது கஸ்சினி, சனிக்கிரகத்தின் சுற்று வட்டத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
நாசாவின் ஆய்வு....
அங்கிருந்து பூமியை புகைப்படம் எடுக்க விரும்பியது நாசா. எனவே, வட அமெரிக்காவில் பகல் பொழுதாக இருக்கும் போது சனிக்கிரகத்தில் இருந்து கஸ்சினியும், ஐரோப்பா, மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய பகுதிகளில் பகல் நேரமாக இருக்கும் போது, புதன் கிரகத்தில் உள்ள மெஸ்செஞ்சர் விண்கலமும் அங்கிருந்த படி பூமியைப் புகைப்படம் எடுக்கும் என அறிவித்தது.
மீண்டும் புகைப்படம் எடுக்க...
இதில் கஸ்சினி விண்கலம் பூமியிலிருந்து சுமார் 1.5 பில்லியன் தொலைவிற்கு அப்பால் இருந்து பூமியை ஏற்கனவே கடந்த வெள்ளிக்கிழமை புகைப்படம் எடுத்தது. இந்நிலையில் மீண்டும் கடந்த சனிக்கிழமை மீண்டும் பூமியை படமெடுக்க திட்டமிடப்பட்டது.
நல்ல உச்சி வெயிலுல...
மக்கள் விண்ணை பார்த்து கையசைக்கும் நேரமாக பகல் 2:27 முதல் 2:42 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்தது.
இது மூன்றாவது முறை...
இதற்கு முன் இதே போன்ரு கடந்த 23 வருடங்களுக்கு முன்னர் 6 பில்லியன் தூரத்திற்கு அப்பால் இருந்து பூமியை சிறு புள்ளியாக படமெடுத்து அனுப்பியது. அதற்குப் பின்னர் கஸ்சினி கடந்த 2006ம் ஆண்டு 1.49 கிலோமீட்டர்களுக்கு அப்பால் இருந்து பூமியை புகைப்படம் எடுத்தது. இது மூன்றாவது முறை.
ஸ்மைல் ப்ளீஸ்...
இவ்வாறு வானிலிருந்து விண்கலங்கள் புகைப்படம் எடுக்கும் போது மக்கள் வானத்தைப் பார்த்து கையசைக்க வேண்டும் என்று நாசா கேட்டுக் கொண்டதற்கிணங்க, நேற்று முன் தினம் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள விண்வெளி ஆய்வகம் முன்பு குறிப்பிட்ட நேரத்தில் கூடிய திரளான மக்கள் சனி கிரகம் உள்ள தென் கிழக்கு திசை நோக்கி வானத்தைப் பார்த்து கையசைத்தனர்.
பிரிண்ட் போட லேட்டாகுமாம்...
இவ்வாறு கஸ்சினி மற்றும் மெஸ்செஞ்சர் விண்கலத்தால் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்கள் சில செயல் முறைகளுக்கு பின் பூமி வந்தடைய வெகு நாட்களாகும் என நாசா தெரிவித்துள்ளது.