21-வது நூற்றாண்டில் மிகவும் சக்தி வாய்ந்த நாடு இந்தியா: அமெரிக்க துணை அதிபர் புகழாரம்!
டெல்லி: 21வது நூற்றாண்டில் மிகவும் சக்தி வாய்ந்த நாடாகவும் தெற்கு ஆசியாவின் பொருளாதார மையமாகவும் இந்தியா திகழ்கிறது என்று அமெரிக்காவின் துணை அதிபர் ஜோ பிடன் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக வருகை தந்துள்ள ஜோ பிடன் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:
இந்தியாவுடனான உறவு முக்கியம்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. இதைத் தான் எனது அனைத்து அதிகாரப்பூர்வ சந்திப்புகளின் போதும் வலியுறுத்தி வருகிறேன். மேலும் ஆசிய பசிபிக் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் பேச வேண்டும். இந்தியாவின் கிழக்கை நோக்கிய பார்வையானது இந்த பிராந்தியத்தில் இணைந்து செயல்படுவதற்கான முக்கிய கருவியாக இருக்கிறது. இருநாடுகளின் பொது விருப்புகள், மதிப்பீடுகளின் அடிப்படையில் நமது உறவை வலுப்படுத்திக் கொள்ள முடியும்.
இந்தியா,சீனா, அமெரிக்கா
ஆசிய பசிபிக் பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியா,சீனா மற்றும் அமெரிக்காதான் முக்கிய சக்திகள். இந்த பிராந்தியத்தின் அமைதி, ஒருங்கிணைந்த செயல்பாட்டுக்கு இந்த மூன்று நாடுகளுமே பொறுப்பு. பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களின் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும். சீனாவின் தென்பகுதியிலும் மத்திய ஆசியாவிலுமான எல்லை விவகாரங்கள் இந்த பிராந்தியத்தில் அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தலிபான்கள் பற்றி..
ஆப்கானிஸ்தானின் அரசியல் எதிர்காலத்தில் தலிபான்கள் பங்கேற்க விரும்பினால் அல்குவைதாவுடனான உறவை தலிபான்கள் துண்டித்துக் கொள்ள வேண்டும். அத்துடன் வன்முறையை ஆதரிக்காமல் ஆப்கானிஸ்தான் அரசியல் சாசனத்தை தலிபான்கள் ஏற்றுக் கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். ஆப்கானிஸ்தானில் வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு அந்நாட்டை மீள்கட்டுமானம் செய்ய வேண்டும். ஆப்கானிஸ்தானுடனான எங்கள் உறவு தொடரவே செய்யும். தீவிரவாதிகளின் புகலிடமாக மீண்டும் ஆப்கான் உருவெடுத்துவிடக் கூடாது என்பதுதான் இலக்கு.
பாகிஸ்தான்..
அண்மையில் பாகிஸ்தானில் நடைபெற்ற தேர்தல்களை நாங்கள் ஆதரித்தோம். பாகிஸ்தானைப் பொறுத்தவரை ஒரு ஜனநாயக அரசு ஆட்சியை நிறைவு செய்து மற்றொரு ஜனநாயக அரசு அதிகாரத்துக்கு வந்துள்ளது. பயங்கரவாத எதிர்ப்பு, பயங்கரவாத தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்கும் விவகாரம் போன்றவற்றை பாகிஸ்தானுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறோம்.
21-ம் நூற்றாண்டில் இந்தியாவின் எழுச்சி
இந்தியாவும் அமெரிக்காவும் பொருளாதாரம், பாதுகாப்பு, பிராந்திய பிரச்சனைகளில் இணைந்து செயல்படுகின்றன. 21-ம் நூற்றாண்டில் இந்தியா சர்வதேச அளவில் மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார வல்லமை கொண்ட நாடாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவின் இந்த வளர்ச்சியை அமெரிக்கா வரவேற்கிறது. 2000-ம் ஆண்டு இந்தியாவுக்கும் அமெரிக்காவும் இடையேயான இருந்த வர்த்தகமானது தற்போது 5 மடங்கு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் 100பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் விரிவடைந்துள்ளது.
சர்வதேச அரசியல் நிலைத்தன்மைக்காக பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை என்பது மிக முக்கியமானதாக இருக்கிறது. இந்திய விமானப் படைக்கான சி-130 ஜே ரக விமானங்களை உருவாக்கியதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. இந்த விமானங்கள் கடந்த மாதம் உத்தர்காண்ட் வெள்ள பாதிப்புகளில் நிவாரண பொருட்களை விநியோகிப்பதில் முக்கிய பங்கு வகித்தது.
ஏடன் வளைகுடா பகுதியில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து கடற்கொள்ளையர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வின் அமைதி காப்பு படையில் மிகப் பெரிய பங்களிப்பை நீண்டகாலம் இந்தியா வழங்கி வருகிறது.
ஆப்கானில் இந்தியா
தென்னாசியாவின் பொருளாதார மையமாக இந்தியா திகழ்கிறது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்களிப்பை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆப்கானிஸ்தானின் அபிவிருத்திக்காக 2 பில்லியன் டாலரை இந்தியா கொடுத்துள்ளது.
ஹெச்-1 பி விசா
அமெரிக்காவில் வேலை கோரும் இந்தியர்களுக்கு பலனளிக்கும் வகையிலான மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது. அதன் மூலம் ஹெச்-1 பி விசா பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது என்றார்.