விஷ விதைகளை சாப்பிட்ட மாணவ-மாணவிகளுக்கு திடீர் வாந்தி: மருத்துவமனையில் அனுமதி
நெல்லை: மானூர் அருகே பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திடீர் வாந்தி பேதி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த கம்மாளங்குளம் காலனியைச் சேர்ந்தவர் மாதர். அவருடைய மகன்கள் சுரேஷ்குமார், சுகுமார் மற்றும் அப்பகுதியை சேர்ந்த சுதர்சன், சக்திவேல், நாககனி, பெருமாள், அனில்குமார், ஆஷாராணி, முருகேசன், மகாராஜன், ராதாகிருஷ்ணன் ஆகிய 10 பேரும் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை என்பதால் அந்த பகுதியில் உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அங்குள்ள செடியிலிருந்து காட்டாமணக்கு விதைகளை எடுத்து சாப்பிட்டனர். முந்திரி பருப்பு போல் இருந்ததால் அதை மாணவர்கள் சாப்பிட்டனர்.
கீழே சிதறிக் கிடந்த விதைகளையும் எடுத்துக் கொண்டு வந்தனர். அந்த விதைகளையும் சாப்பிட்டனர். பின்னர் இரவு தூங்கி விட்டனர். நள்ளிரவில் காட்டாமணக்கு விதைகளை சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதை கண்டு பதறிய பெற்றோர் அவர்களை தனியார் வேன் மூலம் பாளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தாழையூத்து எஸ்.பி. நடராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.