மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எந்த வடிவத்திலும் அனுமதிக்க முடியாது: கருணாநிதி
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் மாணவர்களைத் தேர்ந்தெடுக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான பொது நுழைவுத்தேர்வு நடத்துவது தொடர்பாக இந்திய மருத்துவ கவுன்சில் (எம்.சி.ஐ.), வெளியிட்ட அறிவிப்பினை 18-7-2013 அன்று உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பளித்து இருக்கிறது.
எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்தும் இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பை எதிர்த்து மொத்தம் 115 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீது தான் வழக்கு நடைபெற்று, தற்போது உச்சநீதிமன்றம் பொது நுழைவுத்தேர்வினை ரத்து செய்து வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கு அகில இந்திய அளவில் பொது நுழைவுத்தேர்வு நடத்துவது சம்பந்தமான வழக்கு இந்திய உச்சநீதிமன்றத்தில், ஏற்கனவே வந்தபோது, இந்திய மருத்துவ குழுமம் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அகில இந்திய பொது நுழைவுத்தேர்வுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை எடுத்தது.
இதனை அறிந்ததும் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங்கிற்கும், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை மந்திரி குலாம்நபி ஆசாத்துக்கும் 15.8.2010 அன்று நான் எழுதிய கடிதத்தில், கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசு, குடியரசு தலைவரின் ஒப்புதலோடு, பொறியியல் மற்றும் மருத்துவ கல்விக்கான நுழைவுத்தேர்வினை, 2007-2008-ம் ஆண்டு முதல் ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது என்றும்; அதன் காரணமாக சமூக மற்றும் பொருளாதார நிலைகளில் பின் தங்கியுள்ள கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்.
அகில இந்திய பொது நுழைவுத்தேர்வு முறை; மாநிலங்கள் கல்வித்துறையை நிர்வாகம் செய்வதில் உள்ள உரிமையில் குறுக்கிடுவதாக கருதப்படுகிறது என்றும்; தமிழக அரசு நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு அது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும்; சமூக நீதியின் தாயகமான தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும் என்றும் கருத்து தெரிவித்து, பொது நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்து மறுபரிசீலனை செய்து நல்ல முடிவு ஒன்றை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டேன்.
மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் இதற்கு பதில் அளித்து, 27.8.2010 அன்று அனுப்பிய கடிதத்தில், ‘‘மருத்துவ படிப்பில் அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த கருத்து அகில இந்திய மருத்துவ கவுன்சில் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையிலானதாகும். எனினும் இக்கருத்தின் மீது மாநில அரசுகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆகியவற்றுடன் விரிவாக ஆலோசனை செய்து அவர்களின் அக்கறையையும், உணர்வுகளையும் கருத்தில் கொண்டு முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம் என மத்திய அரசு கருதுகிறது. அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்துவது குறித்த முடிவுகள் மாநில அரசுகளுடனும், மற்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளுடனும் விரிவாக ஆலோசனை செய்த பிறகே மேற்கொள்ளப்படும்'' என எழுதியிருக்கிறார்.
ஏழை-எளிய, நடுத்தர குடும்பங்களை சேர்ந்த வசதிகள் அற்ற கிராமப்புற மாணவர்களுக்கும், வசதிகள் மிகுந்திருக்கும் நகர்ப்புற மாணவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டை அகற்றுவதற்காகவே நுழைவுத்தேர்வு முறையை தி.மு.க. ரத்து செயதது. எனவே நுழைவுத்தேர்வு கூடாது என்ற கொள்கை அடிப்படையிலும்; மருத்துவ கல்லூரி இடங்களுக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு இடமில்லை என்பதாலும்; அகில இந்திய நுழைவுத்தேர்வு மாநில உரிமைகளில் தலையிடும் காரியமாகும் என்பதாலும்; இந்த நுழைவுத்தேர்வுகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக மத்திய மந்திரி குலாம்நபி ஆசாத் அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள இயலாதது மட்டுமல்லாமல்; அவர் ஏற்கனவே நுழைவுத்தேர்வு தொடர்பாக மேற்கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கும், தற்போதைய அவரது அறிவிப்புக்கும் உள்ள முரண்பாட்டையும் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
தி.மு.க.வை பொறுத்தவரை, நுழைவுத்தேர்வு எந்த வடிவத்தில் வந்தாலும்; அதை எதிர்க்கும் என்பதையும் தெளிவுபடுத்திட விரும்புகிறேன். இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.