பயங்கரவாத அமைப்பு பட்டியலில் ஹிஸ்புல்லாவின் ராணுவ பிரிவு: ஐரோப்பிய யூனியன் அதிரடி
ப்ருசெல்ஸ்: லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா கட்சியின் ராணுவப் பிரிவை தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக ஐரோப்பிய யூனியன் நேற்று அறிவித்துள்ளது.
லெபனானைச் சேர்ந்த ஹிஸ்புல்லா கட்சியின் ராணுவப் பிரிவை அமெரிக்காவும், இஸ்ரேலும் தீவிரவாத அமைப்பாகவே பார்த்தன. இந்நிலையில் அந்த அமைப்பை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பாக அறிவிக்க வேண்டும் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும் ஐரோப்பிய யூனியனை வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் ஐரோப்பிய யூனியனின் மாதாந்திர கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட 28 வெளிநாட்டு அமைச்சர்கள் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ பிரிவை தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில் சேர்க்க முழுமனதாக ஆதரவு தெரிவித்தனர்.
இதையடுத்து ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு விசா வழங்கப்பட மாட்டாது. மேலும் அந்த அமைப்புடன் தொடர்புடையவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலாளர் வில்லியம் ஹேக் கூறுகையில்,
தீவிரவாதத்திற்கு எதிராக ஐரோப்பிய யூனியன் ஒற்றுமையுடன் நிற்கிறது என்ற செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய மண்ணில் எந்த அமைப்பும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட முடியாது என்பதையே இந்த முடிவு தெரிவிக்கிறது என்றார்.