மதிய உணவு பலிகள்: பிகார் பள்ளி முதல்வர் சரண்
பாட்னா: பீகாரில் மதிய உணவு உண்ட பள்ளிக் குழந்தைகள் 23 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக இருந்த சாப்ரா மாவட்ட பள்ளி முதல்வர் இன்று போலீசில் சரணடைந்தார்.
பீகார் மாநிலம் சாப்ரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் கடந்த வாரம் மதிய உணவு சாப்பிட்ட பள்ளிக்குழந்தைகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 23 பேர் உயிரிழந்தனர், மேலும் பல குழந்தைகள் மயக்கமடைந்து, சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினர்.
மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை சமைக்க பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெய் மற்றும் உணவு தானியங்கள், பூச்சிக்கொல்லி மருந்து இருப்பு வைக்கப்பட்ட இடத்தில் வைக்கப்பட்டிருந்ததும், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்தப்பட்ட பாத்திரத்திலேயே சமையல் எண்ணெய் எடுக்கப்பட்டு உணவு சமைக்கப்பட்டதால், அந்த உணவு நஞ்சாக மாறிப்போனதும் தடயவியல் மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.
மேலும் சமையலுக்கு கொடுக்கப்பட்ட எண்ணெயில் மருந்து நெடி வீசுவதாக சமையல்காரர் கூறியும், அதனையே சமையலுக்கு பயன்படுத்துமாறு பள்ளி முதல்வர் மீனாபாய் வற்புறுத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் நிகழ்ந்த அன்றே தலைமறைவான பள்ளி முதல்வர் மீனா பாய், தமக்கு முன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, இன்று காலை நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து, இன்று மாலை அவர் போலீசில் சரணடைந்தார். அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மீனா பாயின் கணவர் இன்னும் தலைமறைவாகவே உள்ளார். அவரை பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.