இவர்தான் உலகிலேயே ரொம்பப் பெரியவரோ?
ஸ்ரீநகர்: தனக்கு 141 வயதாவதாகவும், தனது மனைவி தன்னை விட 60 வயது இளையவர் என்றும் கூறுகிறார் காஷ்மீரைச் சேர்ந்த பெரோஸ் உன் மிர் என்ற முதியவர். உலகிலேயே தான்தான் வயதில் முதியவர் என்றும் அவர் சொல்கிறார்.
தான் 1872ம் ஆண்டு பிறந்ததாக அரசு சான்றிதழ் ஒன்றையும் அவர் வைத்துள்ளார். அதேசமயம், ஜப்பானைச் சேர்ந்த மிசவோ ஒகவா என்பவர்தான் இப்போதைக்கு மிகவும் வயதானவர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு வயது 115 ஆகிறது.
ஒருவேளை மிர் சொல்வது உண்மையாக இருந்தால் அவர்தான் உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற கின்னஸ் சாதனையைப் படைப்பார்.
நான்கு மனைவிகள்...
மிர் மொத்தம் நான்கு மனைவிகளுடன் வாழ்க்கை நடத்தியுள்ளார். தற்போதைய அவரது மனைவியின் பெயர் மிஸ்ரா. இவருக்கு வயது 80ஐத் தாண்டி விட்டது.
வயது குறித்து ஆய்வு...
தற்போது மிர் சொல்வது குறித்து கின்னஸ் நிறுவன அதிகாரிகள் நேரில் வந்து விசாரணை நடத்தி வருகிறார்களாம். அவர் சொல்வது உண்மையை, அவருக்கு உண்மையிலேயே 141 வயது ஆகிறதா என்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மிர்தான் உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமையைப் பெறுவார்.
கின்னஸ் சாதனையாளர்கள்...
தற்போது அந்த சாதனையை வைத்திருப்பவர் ஜப்பானின் ஒகவா. அதற்கு முன்பு அந்த சாதனையை படைத்திருந்தவர் பிரான்ஸைச் சேர்ந்த பெண்மணி ஜீன் கால்மென்ட் ஆவார். அவருக்கு வயது 122 ஆகிறது.
தளராத நடை...
இத்தனை வயதானாலும் மிர் தானாகவே நடக்கிறார். தனது வேலைகளை அவரே செய்கிறார். பேசவும் செய்கிறார். தற்போது பஹரி என்ற கிராமத்தில் மிர் வசித்து வருகிறார்.
எல்லைகள் இல்லை....
1890ல் மிர் முதல் திருமணம் செய்துள்ளார். அவருடன் பாகிஸ்தானில் வசித்தார். மனைவி இறந்ததும் 1900களில் காஷ்மீருக்குத் திரும்பினார். இதுகுறித்து மிர் கூறுகையில் அப்போதெல்லாம் ஒரே நாடாக இருந்தோம். எல்லைகள் கிடையாது.
கடலை வியாபாரம்...
எனது தந்தை கராச்சிக்குப் போய் வியாபாரம் செய்து விட்டு வருவார். அப்போது ஸ்ரீநகருக்குப் போவதை விட முஸாபரபாத்துக்குப் போவது ரொம்ப எளிதாக இருந்தது. கராச்சியில்தான் நான் கடலை வியாபாரம் செய்து வந்தேன். காஷ்மீரிலிருந்து எடுத்துக் கொண்டு கராச்சிக்குப் போய் வருவேன் என்றார் மிர்.
பூகம்பத்திர்கு தப்பியவர்...
மிர் மனைவி மிஸ்ரா கூறுகையில், எனது கணவரின் அனுபவங்கள் மிகவும் துயரமானவை. அவர் பலமுறை பூகம்பத்திலிருந்து தப்பியுள்ளார். கட்டிதுபட்டா என்ற இடத்தில் பூகம்பம் வந்தபோது தனது உயிரைப் பணயம் வைத்து பலரைக் காப்பாற்றினாராம். வரலாற்றின் சில முக்கியமான சம்பவங்களின் நடமாடும் சாட்சியாக அவர் இருக்கிறார் என்றார்.
முன்ன மாதிரி இல்லை...
தற்போது வாழ்க்கை நாகரீகமாகி விட்டதாகவும், தொழில்நுட்ப மயமாகி விட்டதாகவும், அது தனக்கு கடினமானதாக இருப்பதாகவும் மிர் வருத்தப்படுகிறார். அப்போதெல்லாம் எல்லோரும் ஒற்றுமையுடன் இருந்தோம். ஒருவரை ஒருவர் சார்ந்து இருந்தோம். இப்போது அப்படி இல்லை என்கிறார் சோகத்துடன்.
கண் ஆபரேஷன்...
10 வருடத்திற்கு முன்பு அவருக்கு கண் ஆபரேஷன் செய்தார்களாம். அப்போது முதல் தனது தாத்தாவின் உடல் நிலை கெட்டு விட்டதாகவும், நினைவு குறைந்து விட்டதாகவும் அவரது பேரன் அப்துல் ரஷீத் தெரிவிக்கிறார்.
ஜப்பான்ல தான் அதிகம்...
உலகிலேயே ஜப்பானில்தான் மிகவும் வயதானவர்கள் அதிகம் உள்ளனர். அங்கு 100 வயதைத் தாண்டியவர்கள் மட்டும் 50,000 பேர் உள்ளனராம்.