23 குழந்தை பலி எதிரொலி: பீகார் முதல்வர், கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு
பாட்னா: பூச்சி மருந்து கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய சாப்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
விஷம் கலந்த உணவை சாப்பிட்டதாலேயே குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
23 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமான முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சாப்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.