ஆள்மாறட்ட வழக்கு: புதுவை முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம் மீதான வழக்கு தள்ளுபடி
கடந்த 2011ஆம் ஆண்டு புதுச்சேரி கல்வி அமைச்சராக இருந்த கல்யாணசுந்தரம் போலி ஆவணம் தயாரித்தும், ஆள் மாறாட்டம் செய்தும் திண்டிவனத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியதாக, தமிழக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து உடனடியாக தலைமறைவானார் கல்யாணசுந்தரம்.
கைது நடவடிக்கையை தவிர்க்க உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரினார். உயர்நீதிமன்றம் அவருக்கு முன் ஜாமீன் வழங்காமல் அவரது மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
இந்நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தை நாடி நிபந்தனையின் பேரில் முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து, 2011ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி திண்டிவனம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதை தொடர்ந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கின் விசாரணை திண்டிவனம் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், அவருக்கு உதவியாக இருந்த ஆசிரியர்கள் ஆதவன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சரிதா உத்தரவிட்டார்.
இதையடுத்து, கல்யாணசுந்தரம் தரப்பில் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. அந்த வழக்கை மீண்டும் திண்டிவனம் அமர்வு நீதிமன்றமே விசாரித்து 3 மாதத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை தொடர்ந்து, வழக்கு விசாரணை மீண்டும் திண்டிவனம் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும், வழக்கு தொடுக்க முகாந்திரம் இல்லை என்று கூறியும் கல்யாணசுந்தரம், ஆதவன் மற்றும் ரஜினிகாந்த் மீது போடப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து நீதிபதி சண்முகநாதன் உத்தரவிட்டார்.
நீதிமன்றத்தின் உத்தரவினை அடுத்து முன்னாள் அமைச்சர் கல்யாணசுந்தரம், ஆதவன், ரஜினிகாந்த் ஆகியோர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதுநாள்வரை கோர்ட், கேஸ் என்று அலைந்த கல்யாணசுந்தரம் இனியாவது மக்கள் பணியை செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.