சர்ச்சைக்குரிய பாட்லா என்கவுன்ட்டர்: ஷாஹ்சத் குற்றவாளியே- கோர்ட் தீர்ப்பு
சம்பவம் என்ன?
டெல்லியில் 2008ஆம் ஆண்டு தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து சில நாட்களில் டெல்லி ஜாமியா நகர் பகுதியில் பாட்லா ஹவுஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் தீவிரவாதிகள் பதுங்கியிருக்கின்றனர் என்று போலீசார் முற்றுகையிட்டனர்.
போலீசார் முற்றுகையிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இந்தியன் முஜாஹிதீன் தீவிரவாதிகள் 7 பேர் பதுங்கியிருப்பதாக போலீசார் தெரிவித்தனர். அப்போது அடுக்குமாடி குடியிருப்பில் இருந்தோருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது. இதில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 4 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஷாஹ்சத் மட்டும் கைது செய்யப்பட்டார். இந்த மோதலில் டெல்லி என்கவுன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் மோகன்சந்த் சர்மாவும் உயிரிழ்ந்தார்.
சர்ச்சைகளின் சங்கமம்
தலைநகர் டெல்லியில் நடந்த இந்த என்கவுன்ட்டர் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போலி என்கவுன்ட்டர் என்று வாதிடப்பட்டது. மேலும் போலீசாருக்குள் நடந்த மோதலில்தான் அதிகாரி மோகன்சந்த் சர்மா கொல்லப்பட்டார் என்றும் சர்ச்சை வெடித்தது.
மேலும் இது தொடர்பான வழக்கில் ஏன் மோகன்சந்த் சர்மா புல்லட்புரூப் உடை அணியவில்லை என்றும் மோகன் சந்த் உடலில் இருந்த துப்பாக்கிக் குண்டும் ஷாஹ்சத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கியில் இருந்த குண்டும் வெவ்வேறானவையே என்றும் சுட்டிக்காட்ட மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
அதுமட்டுமின்றி அரசியல் அரங்கிலும் இது சலசலப்பை ஏற்படுத்தியது. இது போலி என்கவுன்ட்டர்தான் என்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சொல்ல, காங்கிரஸ் கட்சியோ அவரது சொந்த கருத்து என்றது. உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், என்கவுன்ட்டர் நடந்தது உண்மைதான் என்றார்.
இதில் உச்சமாக உத்தரப்பிரதேச தேர்தலின் போது மூத்த காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித், பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் புகைப்படங்களைப் பார்த்து சோனியா காந்தி கதறி கண்ணீர்விட்டார் என்றார். பின்னர் குர்ஷித்தே அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது என்றார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் அனைத்து கட்சிகளுமே நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் பற்றி சுட்டிக்காட்டியிருந்தார்.
வழக்கு விசாரணை
கைதான ஷாஹ்சத் மீது பணியில் இருந்த காவல்துறை ஆய்வாளரை சுட்டுக் கொன்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்ற நீதிபதி ராஜேந்தர் குமார் சாஸ்திரி கடந்த 20-ந் தேதி இறுதி விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தார்.
இந்த வழக்கில் மொத்தம் 70 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் என்கவுன்ட்டரை நேரில் பார்த்த சாட்சிகள். இந்த வழக்கில், பாட்லா ஹவுஸ் என்கவுன்ட்டர் உண்மையானதே. பிடிபட்ட ஷாஹ்ச குற்றவாளியே. அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 29-ந் தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.