மோடியை விமர்சித்த அமார்த்யாவின் பாரத ரத்னாவை பறிக்கச் சொல்வதா... பாஜகவுக்கு காங். கண்டனம்
அதேசமயம், இந்தக் கோரிக்கைய விடுத்த பாஜக எம்.பி. சந்தன் மித்ராவின் கருத்துக்கும், கட்சிக்கும் தொடர்பு கிடையாது என்று பாஜக விளக்கியுள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், பாரத ரத்னா விவாதம் துரதிர்ஷ்டவசமானது. பாஜகவுக்கு இதில் தொடர்பில்லை. தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சம்பந்தப்பட்ட எம்.பியுடையது. அது பாஜகவின் கருத்தாகாது என்று டிவிட் செய்துள்ளார்.
ராஜ்யசபா எம்.பியான சந்தன் மித்ரா இதுகுறித்து 2 நாட்களுக்கு முன்பு ஒரு டிவிட் செய்திருந்தார். அதில், அமார்த்யா சென், மோடி குறித்து கருத்து தெரிவிக்க உரிமை இல்லாதவர். மோடி பிரதமராகக் கூடாது என்று எப்படி இவர் சொல்லலாம். அமார்த்யா சென்னுக்கு இந்தியாவில் வாக்குரிமையே கிடையாது... அடுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் அவருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் மனீஷ் திவாரி இதுகுறித்துக் கூறுகையில், என்ன மன நிலையில் வெளியான பேச்சு இது... இது பாசிசம் என்பதை விட வேறு என்ன சொல்ல முடியும். என்று காட்டமாக கேட்டுள்ளார்.
இன்னொரு மத்திய அமைச்சரான சசி தரூர் வெளியிட்டுள்ள டிவிட் தகவலில், பாரதரத்னாவைத் திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்றார்.