மும்பை பங்குச் சந்தையில் சிரிப்பலைகள்: காரணம் அமெரிக்க துணை அதிபர்
மும்பை: உலகிலேயே சிறந்த கிரிக்கெட் அணி உள்ள நாட்டுக்கு சென்று வந்துள்ளேன் என்று அமெரிக்கா சென்றதும் டெலாவேர் கிரிக்கெட் கிளப்பில் கூறுவேன் என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடென் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அவர் நேற்று மும்பைக்கு வந்தார். மும்பை பங்குச் சந்தைக்கு சென்ற அவர் அங்கு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
1972ம் ஆண்டில் எனது 29வது வயதில் அமெரிக்க செனட்டுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஒரு கடிதம் வந்தது. அதை கண்டுகொள்ளாமல் விட்டதை நினைத்து வருத்தப்படுகிறேன். என் பெயர் பிடென், நான் மும்பையில் இருந்து எழுதுகிறேன். நாம் உறவினர்கள் என்று அதில் எழுதப்பட்டிருந்தது.
எங்களுடைய வம்சத்தினர் 1700களில் கிழக்கு இந்திய கம்பெனிக்கு பணிபுரிந்தபோது மும்பைக்கு வந்துள்ளார்கள் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. அது உண்மை என்றால் நான் இந்தியாவில் நடக்கும் தேர்தலிலேயே போடியிடலாம்.(அனைவரும் சிரித்தனர்) அதற்கு எனக்கு தகுதி உள்ளது. ஆனால் அந்த கடிதத்தை நான் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். தற்போது நான் இந்தியாவுக்கு பல முறை வந்துவிட்டேன். அந்த கடிதத்தில் இருந்ததுபோன்று பிடென் என்பவர் மும்பையில் இருக்கிறாரா, நாங்கள் உறவினர்களா என்பதை கண்டறியப் போகிறேன்.
மும்பைக்கு வந்ததில் பெரு மகிழ்ச்சி. பல நம்பிக்கைகள், மொழிகள் ஆகியவற்றுடன் இருக்கும் உங்களை மெச்சுகிறோம். உங்கள் ஜனநாயகத்தை மெச்சுகிறோம்.
நான் நாடு திரும்பிய பிறகு டெலாவேர் கிரிக்கெட் கிளப்பிற்கு சென்று உலகின் மிகச்சிறந்த கிரிக்கெட் அணி உள்ள நாட்டிற்கு சென்று வந்தேனே என்று கூறுவேன். நீங்கள் தான் ஐசிசி கோப்பையை வென்றவர்கள்.
நீங்கள் இங்கிலாந்தை தோற்கடித்ததில் அயர்லாந்து அமெரிக்கனான எனக்கு மகிழ்ச்சி. அது ஜோக் சரியா. ஊடகங்கள் அதை சீரியஸாக எடுத்து செய்தி வெளியிட்டுவிட வேண்டாம் என்றார்.