ரூ.33 வைத்து ஒரு நாளை ஓட்டுங்கள் பார்ப்போம்: பிரதமர், சோனியாவுக்கு பாஜக தலைவர் மணி ஆர்டர்
டெல்லி: தினமும் ரூ.33 இருந்தால் நகர்ப்புறங்களில் ஒருவரால் வாழ முடியும் என்று திட்டக் கமிஷன் கூறியுள்ளது. இதையடுத்து ரூ.33.33ல் ஒரு நாள் வாழ்ந்து காட்டுங்கள் என்று கூறி அந்த தொகையை பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார் பாஜக தலைவர் விஜய் கோயல்.
இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், கிராமங்களில் தினமும் 27.20 ரூபாயிலும், நகர்ப்புறங்களில் 33 ரூபாயிலும் வாழ முடியும் என்று திட்டக் கமிஷன் தெரிவித்துள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி பாஜக தலைவர் விஜய் கோயல் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, திட்டக் கமிஷன் துணை தலைவர் மான்டெக் சிங் அலுவாலியா மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் ஆகியோருக்கு ரூ.33 பணத்தை மணி ஆர்டர் அனுப்பி தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இது குறித்து கோயல் கூறுகையில்,
பிரதமர், சோனியா, அலுவாலியா மற்றும் ஷீலா தீட்சித் ஆகியோர் ரூ.33 ரொக்கத்தை வைத்து ஒரு நாளை கழிக்கட்டும் பார்க்கலாம் என்றார்.