மாணவர்கள் மோதல்: பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் 10 பேர் சஸ்பெண்ட்!
சென்னை: இரு கல்லூரி மாணவர்களிடையேயான மோதலை அடுத்து வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் 10 பேரை சஸ்பெண்ட் செய்து பச்சையப்பா கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரி மாணவர்களும், பச்சையப்பா கல்லூரி மாணவர்களும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மோதிக் கொண்டனர். இந்த மோதலில் பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. கண்டக்டர் மீது தாக்குதல் நடத்திய மாணவர்கள் பயணிகளின் செல்போனையும் பிடிங்கிச் சென்றனர்.
கல்லூரி தொடங்கிய ஒரு சில தினங்களிலேயே மாணவர்களுக்குள் இந்த மோதல் வெடித்துள்ளது. மாணவர்களிடையேயான மோதல் சில சமயம் வன்முறையாக மாறுவதால் பொதுமக்களும் பாதிப்பிற்குள்ளாகின்றனர்.
10 பேர் சஸ்பெண்ட்
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு போலீசார் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வந்தனர். ஆனால், கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டுவருவதால் தற்போது அவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய தொடங்கி உள்ளனர். வன்முறையில் ஈடுபட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேர் மீது கீழ்ப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து, கல்லூரி நிர்வாகமும் வன்முறையில் ஈடுபட்ட 10 மாணவர்களையும் தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளது.
டிஸ்மிஸ் ஆவார்களா?
இந்த மாணவர்களில் 3 பேர் முதலாமாண்டு படித்து வருகிறார்கள். இவர்கள் தொடர்ந்து இதே கல்லூரியில் படித்தால், மேலும் சக மாணவர்களோடு கோஷ்டி சேர்த்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் அவர்களை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யவும் கல்லூரி நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது. இதுகுறித்து கல்லூரி விசாரணை கமிட்டி இன்று கூடி முடிவெடுக்கவுள்ளது..
டிரைவரின் கழுத்தில் கத்தி
கடந்தவாரம் பாரிமுனையில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற 57 எப் மாநகர பேருந்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் பாட்டு பாடியபடி சென்றனர்.
தங்கசாலை புதிய பஸ் நிலையம் வந்தபோது மேலும் 10 மாணவர்கள் ஏறினர். பேசின்பிரிட்ஜ் மேம்பாலத்தில் பஸ் சென்றபோது, இரு தரப்பு மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். தானியங்கி கதவு மூடப்பட்டு இருந்ததால் ஒரு தரப்பு மாணவர்கள் பஸ் கண்ணாடியை உடைத்து வெளியே குதித்தனர். இதனால் பயணிகள் அலறினர். டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் காவல் நிலையம் கொண்டு செல்ல முயன்றார். மற்றொரு தரப்பு மாணவர்கள் டிரைவர் கழுத்தில் கத்தியை வைத்து, நிறுத்தும்படி மிரட்டினர். அவர் பஸ்சை நிறுத்தியதும் சாலையில் இருதரப்பு மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. ஏழுகிணறு, யானைக்கவுனி போலீசார் வந்ததும் அவர்கள் ஓட்டம் பிடித்தனர்..
மாணவர்களின் மோதல் தொடர்கதையாகிவருவதால் இதனை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.