வேகாத இட்லி, வௌங்காத சாம்பார்… நாமக்கல் அருகே அரசு விடுதியில் 19 மாணவிகள் மயக்கம்
நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி உள்ளது. இங்கு வேலக்கவுண்டம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 50 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இதில் 5 மாணவிகள் உடல் நிலை சரியில்லாமல் வீட்டுக்கு சென்று விட்டனர். மீதி உள்ள மாணவிகள் 45 பேருக்கு நேற்று காலை உணவாக இட்லி, சாம்பார் வழங்கப்பட்டது.
இட்லி சாப்பிட்ட சிறிது நேரத்தில் 19 மாணவிகளுக்கும் அடுத்தடுத்து வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்தனர். இதனையடுத்து விடுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சித்ரா மற்றும் அலுவலர்கள் விடுதிக்கு சென்று, பாதிக்கப்பட்ட மாணவிகள் அருகில் உள்ள மாணிக்கம்பாளையம், பெரியமணலி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேர்க்கப்பட்டனர்.
அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மாணவிகளுக்கு சரியாக வேகாத இட்லியும், மஞ்சள் அதிகமாக கலந்த சாம்பாரும் வழங்கப்பட்டுள்ளது. இதை சாப்பிட்ட பலருக்கு குமட்டல் வாந்தி, தலை சுற்றல் ஏற்பட்டு மயக்கமடைந்தது தெரியவந்தது. அங்கு தயாரிக்கப்பட்ட இட்லி, சாம்பார் பரிசோதனைக்காக சேலம் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
தகவல் அறிந்த நாமக்கல் கலெக்டர் தட்சிணாமூர்த்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவிகளை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நாமக்கல் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக இயங்கி வரும் விடுதிகளில் 63 சமையலர்கள் பணிபுரிகிறார்கள். அவர்களுக்கு சுகாதாரமான முறையில் சமையல் செய்வது குறித்து பயிற்சி அளிக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும் மாணவிகள் மயக்கத்திற்கு காரணமான தரமான முறையில் உணவு தயாரித்து கொடுக்காத பெண் சமையலர் அருணாவை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.