நீலகிரி மாவட்டத்தில் கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. கூடலூர் பகுதியில் தொடர்ந்து நீடிக்கும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நீர்நிலைகள் நிரம்பும் தருவாயில் உள்ளன.
கடந்த ஒருவாரகாலமாக கனமழை கொட்டி வருவதால் ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மங்குலி பகுதியில் ஆற்றுநீர் ஊருக்குள் புகுந்துள்ளதால், 20க்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. புத்தூர் வயல் தேன்கொல்லி கிராமத்தில், மலைவாழ் மக்களின் வீடுகளுக்குள் தண்ணீ ர் புகுந்துள்ளதால், பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இடைவெளியின்றி பெய்து வரும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிகமுக்கியமான சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சித்தலைவர் பிறப்பித்துள்ளார்.
வால்பாறையில் விடுமுறை
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தொடர்மழை காரணமாக முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.