தமிழக அரசு ஊழியர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3,000 வரை ஊதிய உயர்வு: 60,000 பேர் பயன்பெறுவார்கள்
மத்திய அரசு ஊழியர்களைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் குறைபாடுகள் உள்ளது என்று தெரிவித்த அரசு ஊழியர் சங்கங்கள் அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இதையடுத்து அரசு செலவீனத்துறை முதன்மை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் தலைமையில் 6-வது ஊதியக்குழு குறைபாடுகள் நிவர்த்திக்குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமைக்கப்பட்டது. நிதித்துறை கூடுதல் செயலாளர் பத்மநாபன், இணைச் செயலாளர் டாக்டர் உமாநாத் ஆகியோர் அடங்கிய இந்த குழு பாதிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கருத்துகளை கேட்டு தனது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அண்மையில் சமர்பித்தது.
இதையடுத்து அந்த குழுவின் பரிந்துரை ஏற்கப்பட்டுள்ளது. அதன்படி விவசாயம் மற்றும் மண்வளபாதுகாப்புத்துறை, வேளாண் பொறியியல்துறை, கூட்டுறவுத்துறை, கூட்டுறவு தணிக்கைத்துறை, பொது சுகாதாரத்துறை உள்பட 20க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் நேற்று ஊதிய உயர்வை பெற்றனர்.
அவர்களுக்கு ரூ.200 முதல் ரூ.3,000 வரை ஊதிய உயர்வு அளித்து நேற்று மட்டும் தனித்தனியாக துறை வாரியாக 20 அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவின் மூலம் 43 பிரிவுகளைச் சேர்ந்த 60,000 அரசு ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இது தவிர துறை வாரியாக மேலும்
பல அரசாணைகள் வெளியிடப்படவிருக்கின்றன.
இது குறித்து என்.ஜி.ஓ. சங்க முன்னாள் தலைவர் கோ. சூரிமூர்த்தி கூறுகையில்,
அரசு ஊழியர்களின் நீண்ட நாள் மனக்குறையை முதல்வர் ஜெயலலிதா தீர்த்து வைத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த புதிய உத்தரவின்படி லட்சக் கணக்கான அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் அதிகரிக்கும் நிலை ஏற்படும். இந்த ஊதிய உயர்வு அரசு ஊழியர்களுக்கு பேருதவியாக இருக்கும். இதை அளித்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு அரசு ஊழியர்கள் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.