1 ரூபாய்க்கு ஃபுல் மீல்ஸ் சாப்பிட முடியுமாம்! சொல்கிறார் மத்திய அமைச்சர் ஃபரூக் அப்துல்லா
கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது என கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அறிவித்த மத்திய திட்டக்குழு, கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருமானம் ஈட்டுபவர்கள் ஏழைகளாகக் கருதப்பட மாட்டார்கள் எனக் கூறியது.
மத்திய திட்டக்குழுவின் இந்த அறிவிப்புக்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. இந்த நிலையில், திட்டக்குழுவின் அறிவிப்பை நியாயப்படுத்தி மக்களின் கோபத்தை மேலும் அதிகரித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ஃபரூக் அப்துல்லா, தோழமை கட்சியான காங்கிரஸை காப்பாற்றுவதாக எண்ணிக்கொண்டு தன்பங்குக்கு கருத்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நீங்கள் என்ன சாப்பிட விரும்புகிறீர்களோ அதனை பொறுத்து 1 ரூபாயிலோ அல்லது 100 ரூபாயிலோ உங்களது வயிற்றை நிரப்பிக்கொள்ள முடியும். ஏழைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நாங்கள் பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம்.எனவே ஏழைகள் நன்றாக சாப்பிட்டு ஆரோக்கியமாக இருந்தால்தான் இந்தியா முன்னேறும்" என்றார்.
நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பப்பர், மும்பை நகரில் இப்பொழுது கூட 12 ரூபாய்க்கு என்னால் முழு சாப்பாடு வாங்கி சாப்பிட முடியும். ஆனால் 'வடபாவ்' அல்ல. நிறைய அரிசி சாதம், பருப்பு சாம்பாருடன் காய்கறி கூட்டும் கலந்து கிடைக்கும்" என்று கூறியிருந்தார்.
அதேபோல் டெல்லி காங்கிரஸ் தலைவர் ரஷீத் மசூத், டெல்லியில் 5 ரூபாய் விலையிலேயே முழு சாப்பாடு கிடைக்கும் என்றும், தனது சாப்பாட்டிற்காக தாம் 5 ரூபாய்க்கும் குறைவாகவே செலவிடுவதாகவும் கூறி அவர் பங்கிற்கு டெல்லிவாசிகளை கொந்தளிக்க வைத்தார்.
12 ரூபாய், 5 ரூபாய் என்பதையும் தாண்டி 1 ரூபாயில் முழு சாப்பாடு சாப்பிட முடியும் என்று மத்திய அமைச்சர் கூறி மக்களின் கோபத்தீயில் எண்ணெய் வார்த்துள்ளார்.