'லீவு' முடிந்து மனைவியுடன் அமெரிக்காவிலிருந்து திரும்பினார் டோணி...!
ராஞ்சி: மனைவியுடன் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த கேப்டன் டோணி நாடு திரும்பினார்.
மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த முத்தரப்புத் தொடர் கோப்பையை தனது சூப்பர் ஆட்டத்தால் இந்தியாவுக்கு வென்று கொடுத்த கையோடு அமெரிக்காவுக்கு தனது மனைவி சாக்ஷியுடன் போனார் டோணி.
அங்கு விடுமுறையைக் கழித்து விட்டு மனைவியுடன் நாடு திரும்பியுள்ளார்.
பைனல் ஆட்டத்தில் பலே விளையாட்டு
மேற்கு இந்தியத் தீவுகளில் நடந்த செல்கான் மொபைல் கோப்பை முத்தரப்புத் தொடரின் இறுதியாட்டத்தில் டோணியின் ஆட்டம்தான் சிலாகித்துப் பேசப்பட்டது.
செம சிக்ஸ்
அப்போட்டியில் இந்தியாவின் வெற்றியை அட்டகாசமான முறையில் ஆடி உறுதி செய்து கோப்பையைப் பெற்றுத் தந்தவர் டோணி. அதிலும் வெற்றிக்குத் தேவையான ரன்களை சிக்ஸ் அடித்து அவர் பெற்ற விதம் அத்தனை பேரையும் கவர்ந்து விட்டது.
கடைசி ஓவரில்
கையில் இருந்ததோ ஒரே ஒரு விக்கெட். ஆனாலும் சற்றும் கலங்காமல், பயப்படாமல், மூன்றே பந்துகளில் 6, 4, 6 என அடித்து பட்டையைக் கிளப்பி விட்டார் டோணி. 2 பந்து மிச்சம் வைத்து போட்டியையும் முடித்தார்.
டோன்ட் டிஸ்டர்ப் ப்ளீஸ்...
போட்டி முடிந்த கையோடு ஒரு டிவிட்டையும் தட்டி விட்டார்... அதில் இது விடுமுறை.. எனவே யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று கூறி விட்டு மனைவியுடன் அமெரிக்காவுக்குக் கிளம்பிப் போய் விட்டார்.
சாம்பியனாக திரும்பினார்
இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் டிராபியை வென்று, மேற்கு இந்தியத் தீவுகளில் செல்கான் மொபைல் கோப்பையையும் வென்ற பிறகு முதல் முறையாக நாடு திரும்பியதால் விமான நிலையத்தில் ரசிகர்கள் டோணியை வரவேற்று வாழ்த்தத் தவறவில்லை.
இங்கேயும் ஓய்வுதான்
தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வேயில் விராத் கோஹ்லி தலைமையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. எனவே இந்த மாதமும், அடுத்த மாத மத்தி வரையிலும் கூட டோணிக்கு விடுமுறை...