வாஜ்பாய் சொல்லட்டும்.. பாரத ரத்னாவைத் திருப்பித் தந்து விடுகிறேன்- அமார்த்யா சென்
பாஜகவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி சந்தன் மித்ரா, அமார்தாய சென்னுக்கு கொடுக்கப்பட்ட பாரத ரத்னா விருதை மீண்டும் பாஜக ஆட்சியைப் பிடிக்கும்போது பறிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கோபத்துடன் பதிலளித்துள்ளார் அமார்த்யா சென். அவர் இதுகுறித்துக் கூறுகையில், இந்த விருதை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுதான் எனக்குக் கொடுத்தது என்பது மித்ராவுக்குத் தெரியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. இந்த விருதை அப்போதைய பிரதமர் வாஜ்பாய்தான் எனக்குக் கொடுத்தார். அவர் சொல்லட்டும், நானே உடனே எனது விருதை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்.
மித்ராவின் கோரிக்கை துரதிர்ஷ்டவசமானது. இது என் மீதான தனிப்பட்ட தாக்குதலாகும். என்னை அரசியல் விவாதத்திற்குள் இழுத்து சிலர் தனிப்பட்ட முறையில் பலன் அடையப் பார்க்கிறார்கள். இது நியாயமற்றது. இது உருப்படியில்லாத ஒரு செயலாகும்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து அத்வானி, யஷ்வந்த் சின்ஹா, ஜஸ்வந்த் சிங், அருண் ஜேட்லி போன்றோருடன் நான் பலமுறை விவாதித்துள்ளேன் என்றார் சென்.