உ.பியில் பள்ளிக் குழந்தைகளுக்கு ‘தவளை’ச் சத்துணவு: ஊழியர்கள் சஸ்பெண்ட்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் அரசு பள்ளி ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் தவளை ஒன்று இறந்து கிடந்ததால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சம்பந்தப்பட்ட சத்துணவு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மொரடாபாத்தில் உள்ள திலாரி என்னும் பகுதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி ஒன்றில், வழக்கம்போல நேற்று மாணவர்களுக்கு இலவச மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், ஒரு சிறுமி சாப்பிட வாங்கிய உணவில் தவளை ஒன்றின் உடல் கிடந்தது.
அதிர்ந்து போன சிறுமி உடனடியாக தனது பெற்றோர் மற்றும் ஊர் மக்களிடம் தவளை சத்துணவில் கிடந்த தகவலைத் தெரிவித்தார். சென்ற வாரம் பீகாரில் விஷ உணவை உண்டு 23 குழந்தைகள் பலியான நிலையில், இவ்வாறு அலட்சியமாக தவளை கிடந்த விஷ உணவை குழந்தைகளுக்கு வழங்கிய அப்பள்ளி சத்துணவு ஊழியர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் துணை நீதிபதி ஆகியோர் உணவில் தவளை கிடந்ததை உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து, அப்பள்ளியின் சத்துணவு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளனர்.