திவ்யா தாயாரின் ஆட்கொணர்வு மனு தள்ளுபடி...!
தனது மகள் திவ்யாவை, இளவரசன் சட்டவிரோதமாக கடத்திச் சென்று திருமணம் செய்து விட்டதாகவும், அது செல்லாது, தனது மகளை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்று கோரி திவ்யாவின் தாயார் தேன்மொழி ஆட்கொணர்வு மனு ஒன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போதுதான் தான் இளவரசனுடன் போக விரும்பவில்லை. கடைசி வரை தாயாருடன் இருக்கப் போகிறேன் என்று தெரிவித்தார் திவ்யா. அடுத்த நாள்தான் இளவரசன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.
இந்த நிலையில் இளவரசன் மரணத்திற்கு முன்பாக தனது மகள் வந்து விட்டதால் ஆட்கொணர்வு மனுவை திரும்பப் பெறுவதாக பாமக வக்கீல் மூலமாக உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் தேன்மொழி.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் ஜெயச்சந்திரன், சுந்தரேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் ஆட்கொணர்வு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.