இழப்பீட்டுத் தொகையால் ஸ்ருதியை ஈடு செய்ய முடியுமா?: நேற்று ஸ்ருதியின் முதலாம் நினைவு நாள்
சென்ற ஆண்டு ஜூலை 25ம் நாள், பள்ளி சென்று திரும்பிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஸ்ருதி, பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டையால் தவறி சாலையில் விழுந்து பரிதாபமாக பலியானார். தமிழகமெங்கும் அதிர்ச்சி அலைகளை உண்டாக்கிய அம்மரணத்தைத் தொடர்ந்து, பள்ளிப் பேருந்துக்கான நிபந்தனைகளை கெடுபிடியாக்கியது தமிழக அரசு.
ஸ்ருதியின் தாயாரான ப்ரியாக்கு ஸ்ருதியைச் சேர்த்து இரு பிள்ளைகள் இருந்தனர். ஸ்ருதி பிறந்த பின்னர் குடுமப்க்கட்டுபாடு செய்து கொண்ட ப்ரியா, சமீபத்தில் மீண்டும் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தைப்பேறுக்காக தயாராகி வருகிறார்.
ஸ்ருதியின் முதலாம் நினைவு நாளான நேற்று, அவருக்கு பிடித்தமான சர்க்கரைப் பொங்கலும், காய்கறிச் சாதமும் செய்து படைத்துள்ளனர். ஸ்ருதி பயன் படுத்திய வளையல்கள், டிரஸ்களை அவளது நினைவாக வைத்துள்ளனர் அவரது குடும்பத்தினர்.
இது குறித்து ப்ரியா கூறியதாவது, ‘யாராலும் ஸ்ருதியை ஈடு செய்யவே முடியாது. ஆனால், ஸ்ருதி இன்றி வாடும் எங்களது மூத்த மகனின் எதிர்காலத்தைக் கருத்தில் கொகொண்டு மீண்டும் ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்துள்ளோம்.
ஸ்ருதிக்கு சர்க்கரைப் பொங்கலும், காய்கறி சாதமும் மிகவும் பிடிக்கும். பெரும்பாலான நாட்களில் அவளுக்கு மதிய உணவாக அதையே செய்து கொடுப்பேன். பள்ளியில் மிகவும் துறுதுறுப்பான, புத்திசாலிக் குழந்தை என ஆசிரியர்கள் ஸ்ருதியைப் புகழ்ந்து நினைவு கூறுகிறார்கள்.
ஸ்ருதியின் இழப்பிற்கு நஷ்ட ஈடு தருவதாகக் கூறினார்கள். ஆனால், எவ்வளவு பணம் கொடுத்தாலும் ஸ்ருதியின் இழப்பை ஈடுசெய்ய முடியாது என்பதால் அதை மறுத்து விட்டோம்' எனக் கண்ணீரோடு தெரிவித்துள்ளார் ப்ரியா.