இங்கிலாந்தில் வினோதம்: 200 அடி உயர மலையில் இருந்து உருளும் ‘த்ரில்லிங்’ போட்டி....
லண்டன்: வெளிநாட்டுக்காரர்களுக்கு எதையாவது வித்தியாசமாகச் செய்வது என்பது மிகவும் சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. அந்த வகையில் இங்கிலாந்தில் மலையில் இருந்து உருளும் விநோதப் போட்டியை விளையாடுகிறார்கள்.
பரிசு என்பதையும் தாண்டி, த்ரில்லிங்காகவே பலர் இந்தப் போட்டியில் கலந்து கொள்கிறார்களாம். ஆபத்துகள் நிறைந்த இப்போட்டியில், வரிசைக்கட்டி கலந்து கொள்கிறார்கள் இவர்கள்.
வயிற்றுப் பிழைப்புக்காக கயிறு மேல் நடக்கும் மனிதர்கள் இன்னும் நம்மூரில் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இங்கிலாந்திலோ பொழுதுபோக்கு, வீரம் என்ற பெயரில் மலையில் இருந்து உருளுகிறார்கள்.
மலையில் உருளும் போட்டி...
இங்கிலாந்தின் குளோவ் செஸ்டர் பகுதியில் உள்ள ‘கூப்பர் ஹில்' குன்று சுமார் 200 அடி உயரம் உடையது. எனவே, இந்தக் குன்று தான் போட்டிக்கான சரியான களம் என தேர்ந்தெடுத்துள்ளனர் போட்டியாளர்கள்.
கடந்த 213 ஆண்டுகளாக...
மிகவும் ஆபத்தான போட்டியான இது, 1800ம் ஆண்டுகளில் இருந்து விளையாடப் பட்டு வருகிறது.
அரசு விதித்த தடை...
காயம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகமானதால், கடந்த 2010ம் ஆண்டு இந்தப் போட்டி தடை செய்யப் பட்டது.
தடையை மீறி போட்டி...
அரசு தடை செய்த போதிலும், உருளும் போட்டியில் தீவிர ஆர்வம் கொண்ட மக்கள் கடந்த சில ஆண்டுகளாகத் தடையை மீறி திருட்டுத்தனமாக போட்டியை நடத்தி வருகிறார்களாம்.
குழு, குழுவாகப் பிரிந்து...
சமீபத்தில் நடந்தப் போட்டியில் சுமார் நூறு பேர் கலந்து கொண்டனராம். இருபது பேர் கொண்ட குழுக்களாக 5 முறை இப்போட்டி நடத்தப்பட்டது.
பலநாட்டு வீரர்கள்...
முதல் சுற்றில் 27 வயது அமெரிக்க வாலிபர் ஒருவரும், அடுத்தச் சுற்றில் ஆஸ்திரேலிய வீரர் ஒருவரும், மூன்றாவது சுற்றில் ஜப்பானியர் ஒருவரும் வெற்றி பெற்றனர்.
இளம் பெண் வெற்றி...
பெண்களுக்காக தனியே இரு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. அதில் முதல் சுற்றில் 16 வயது இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றார்.
காயம்... பெருங்காயம்...
கடைசி பிரிவு போட்டியில் பலர் படுகாயம் அடைந்ததால் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது.