ஏழைகள் வரையறைக்கு கண்டனம்.. மத்திய அமைச்சர் கபில்சிபலுடன் கை கோர்த்த திக்விஜய்சிங்!
கிராமங்களில் ஒரு நாளைக்கு ரூ.27.20க்கு மேலும், நகரங்களில் ரூ.33.33க்கு மேலும் வருவாய் ஈட்டுவோர் ஏழைகள் அல்ல என்பதுதான் திட்டக் குழுவின் கணக்கு. இது பெரும் சர்ச்சையை உருவாக்கி வைத்திருக்கிறது.
ரூ1, ரூ5, ரூ12க்கு வயிறார சாப்பிட முடியும் என்று மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா, காங்கிரஸின் ராஜ் பப்பார், ரஷீத் மசூத் ஆகியோர் கூறி கண்டனங்களை வாங்கியிருந்தனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கபில்சிபலோ திட்டக் குழுவுக்கு கண்டனம் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். கொல்கத்தாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ரூ5 ஆயிரத்துக்கும் மேல் மாத வருவாய் கொண்டோர் ஏழைகள் இல்லை என்கிறது திட்டக் குழு. இது மிகவும் தவறானது. ரூ5 ஆயிரத்தை வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்த முடியும்? என்றார்.
இன்று ட்விட்டர் வழியாக இந்த சர்ச்சையில் தம்மையும் இணைத்துக் கொண்டிருக்கிறார் காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சிங். "இந்த திட்டக் குழுவின் ஏழைகளுக்கான வரையறை எப்போதுமே தவறாக இருக்கிறது. அனைத்து பகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வரையறை என்பது ஏற்க முடியாதது என்று கூறியுள்ளார்.