5 சத்துணவு அமைப்பாளர்கள் சஸ்பெண்ட்: விழுப்புரம் கலெக்டர் உத்தரவு
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் சத்துணவு கூடங்களை சுகாதாரமாக வைத்திருக்காமல் இருந்த 5 சத்துணவு அமைப்பாளர்களை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சத்துணவு மையங்களை கலெக்டர் சம்பத் ஆய்வு மேற்கொண்டார்.
மயிலம் ஒன்றியம் தழுதாளி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு மையத்தில் நடைபெற்ற ஆய்வின் போது மாணவர்களுக்கு உணவு மற்றும் முட்டை குறைவாக வழங்கப்பட்டது தெரியவந்தது. சத்துணவு மையத்தை சுத்தமாக வைத்திருக்கவில்லை போன்ற பல்வேறு காரணங்களால் சத்துணவு அமைப்பாளர் அனிதா என்பவரை தற்காலிக பணிநீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.
இதேபோன்று சத்துணவு மையத்தில் பல்வேறு குறைபாடுகள் காரணமாக சின்னசேலம் ஒன்றியம் கூகையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் கோவிந்தராஜ், விழுப்புரம் எம்.ஆர்.ஐ.சி. உயர்நிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் செல்வி ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். விழுப்புரம் ராமகிருஷ்ணா நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் சூரியமூர்த்தி சங்கராபுரம் ஒன்றியம் எஸ்.குளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் அலாவுதீன், ஆகியோரையும் சஸ்பெண்ட் செய்து கலெக்டர் சம்பத் உத்தரவிட்டுள்ளார்.