26ம் தேதி திமுக எம்.பி. கனிமொழி பதவியேற்காததன் காரணம் என்ன?
தமிழகத்தைச் சேர்ந்த அதிமுகவின் இளவரசன், மைத்ரேயன், திமுகவை சேர்ந்த கனிமொழி, திருச்சி என். சிவா, காங்கிரசை சேர்ந்த ஞானதேசிகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராஜா ஆகியோரின் பதவிக்காலம் கடந்த 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இதனால், இந்த ஆறு இடங்களுக்கான தேர்தல் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏழு பேர் போட்டியிட்டதால் வாக்கெடுப்பு நடைபெற்றது.
இதில் அதிமுகவை சேர்ந்த அர்ஜுனன், லட்சுமணன், மைத்ரேயன், ரத்தினவேல் ஆகியோரும், திமுகவை சேர்ந்த கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி. ராஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட ஆறு எம்.பி.க்களும் ஜூலை 26 ம் தேதி பதவியேற்றுக் கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி டாக்டர் வா.மைத்ரேயன், கே.ஆர். அர்ஜுனன், லட்சுமணன், டி.ரத்தினவேல் மற்றும் டி.ராஜா ஆகிய 5 பேர் கடந்த 26ம் தேதி பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு டெல்லி மேல்-சபை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஹமீது அன்சாரி பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். ஆனால் அன்று கனிமொழி மட்டும் பதவியேற்றுக் கொள்ளவில்லை.
இது குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான தகவல் ஒன்று பரவி வருகின்றது. அது என்னவென்றால் அரசியலிலும் சரி, சினிமாவிலும் சரி சென்டிமென்ட் மிகவும் முக்கியம். நல்ல நேரம், ராகு காலம், எம கண்டம் என சென்டிமென்ட் டச் அதிகம் இருக்கும்.
தற்போது ஆடி போர்க்கலம் நடைபெறுகின்றது. அதாவது ஆடி மாதம் என்றாலே தமிழகத்தில் பலரும் நல்ல விஷயங்களை ஒத்திவைக்கின்றனர். மேலும், ஆடி முதல் தேதியில் இருந்து 18ம் தேதி வரை போர்க்கலம் என கூறப்படுகின்றது. இந்த 18 நாட்களில் எந்த ஒரு நல்ல விஷயத்தை செய்வதை பெரும்பாலான நபர்கள் தவிர்த்துவிடுவார்கள். அந்த நடைமுறையில் தான் கனிமொழி தனது பதவியேற்பு விழாவை தள்ளிவைத்து விட்டார்.
கடந்த காலங்களில் நல்ல நேரம், காலம் பார்க்காமல் செயல்பட்டாதல் தான் ஸ்பெக்ட்ரம் ஊழல் மறறும் சர்ச்சைக்குரிய விஷயங்களில் சிக்கிக் கொண்டதாக ஜோதிடர்கள் சிலர் கருத்து கூறியதாக கூறப்படுகின்றது. இதனால் தான் கனிமொழி தனது பதவியேற்பு நிகழ்ச்சியை தள்ளிவைத்து விட்டதாக கூறப்படுகின்றது.
திமுகவில் அக்கட்சி தலைவர் கருணாநிதி தவிர அவரது குடும்பத்தில் உள்ள மற்ற அனைவரும் கோவில்களுக்கு சென்று சாமி கும்பிடும் வழக்கம் உள்ளவர்கள். மேலும், ஜாதகத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றும் கூறப்படுகின்றது. கனிமொழி வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பதவியேற்றுக்கொள்வார் என்று திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.