குற்றாலத்தில் முதன்முறையாக காய்கறி, பழக் கண்காட்சி
குற்றாலம்: குற்றாலத்தில் முதன்முறையாக காய்கறி மற்றும் பழக் கண்காட்சி நடந்து வருகிறது.
குற்றாலத்தில் சீசன் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு சாரல் திருவிழா துவங்கியது. அமைச்சர்கள் செந்தூர் பாண்டியன், சண்முகநாதன், எம்.எல்ஏ.க்கள் கடம்பூர் ராஜி, துரையப்பா, முத்துச் செல்வி, வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன், கலெக்டர் சமயமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி திருவிழாவை தொடங்கி வைத்தனர்.
சாரல் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கண்காட்சிகள் மற்றும் போட்டிகள் நடத்தப்படுகிறது. இன்று காலை நீச்சல் குளத்தில் நீச்சல் போட்டி நடைப்பெற்றது. விழாவில் தினமும் மாலையில் ஆடல், பாடல், நாட்டியம், நாட்டுப்புற கலைகள், வெளிமாநில குழுவினரின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடக்கிறது. சாரல் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கலைவாணர் கலையரங்குகள் வர்ணம் பூசி புதுப்பிக்கபட்டு வருகிறது. சிறுவர் பூங்கா முதல் சுற்றுச்சூழல் பூங்கா வரை உள்ள சுவர்கள் வர்ணம் பூசப்பட்டுதமிழ பாரம்பரியத்தை விளக்கும் வகையில் வரையப்பட்டுள்ள ஓவியங்களுக்கு வர்ணம் தீட்டி புதுப்பிக்கப்பட்டுள்ளன.
முதன்முறையாக
குற்றாலத்தில் முதன் முறையாக காய்கறி, பழக் கண்காட்சி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்றது.
செந்தூர் பாண்டியன்
தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் செந்தூர் பாண்டியன் கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
வனவிலங்குகள்
காய்கறிகளில் வனவிலங்குகள், பறவை இனங்கள், அழிந்துபோன டைனோசர், நீரில் வாழும் இனங்கள் போன்றவைகளும், கண்ணை கவரும் வண்ணம் மயில், கொக்கு, கோழி, சேவல், போன்றவைகளும் இந்த கண் காட்சியில் இடம் பெற்றிருந்தன.
கூடங்குளம்
கூடங்குளம் அணு உலையில் பாதுகாப்போடு மின்சாரம் உற்பத்தி செய்யும் விதம், இஸ்ரோ ராக்கெட் கூடம் குறித்த கண்காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த அரங்குகளையும் அமைச்சர் செந்தூர் பாண்டியன் திறந்து வைத்தார்.
போட்டிகள்
29ம் தேதி காலை 10 மணிக்கு படகு போட்டியும், 30ம் தேதி காலை 11 மணிக்கு சுற்றுச்சூழல் பூங்காவில் மலர் கண்காட்சியும், மாலை 3 மணிக்கு ஆணழகன் போட்டியும், 31ம் தேதி 3 மணிக்கு நாய் கண்காட்சி, ஆகஸ்ட் 1ம் தேதி காலை 10 மணிக்கு கோலப்போட்டி, 11 மணிக்கு சுற்றுசூழல் பூங்காவில் வாசனை மற்றும் சுவையூட்டும் பொருட்கள் கண்காட்சி, 2ம் தேதி மாலை 3 மணிக்கு பரம்பாரிய கார் கண்காட்சி, மாலை 6 மணிக்கு சாரல் திருவிழா நிறைவு விழா நடக்கிறது.
சரத்குமார் மிஸ்ஸிங்
தொடக்க விழா அன்று தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார், எம்.எல்.ஏ.க்கள். இசக்கி சுப்பையா, நைனார் நாகேந்திரன், பிஜி ராஜேந்திரன், எம்.பி.க்கள் லிங்கம், தங்கவேல், ராமசுப்பு, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை காண முடியவில்லை.