துருக்கியில் பறந்த ‘24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்': புறா விடு ‘உளவு’ சர்ச்சை
இஸ்தான்புல்: துருக்கியில் பறந்த புறாவின் காலில் இஸ்ரேல் நாட்டு முத்திரைப் பதிக்கப்பட்டிருந்ததால், அப்பறவை துக்கியை உளவு பார்ப்பதற்காக அனுப்பப் பட்டதாக இருக்கலாம் என அந்நாட்டு மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக ஆளில்லாத விமானங்களை அனுப்பி அண்டை நாடுகள் உளவு பார்க்கப்படுவது வழக்கம். ஆனால், வித்தியாசமாக இஸ்ரேல் புறா ஒன்றை அனுப்பி தங்கள் நாட்டை உளவுப்பார்த்ததாக குற்றம் சாட்டுகின்றனர் துருக்கி நகர மக்கள்.
சில தினங்களுக்கு முன்னர், துருக்கி நாட்டின் எலாஷிக் மாகாணத்தின் அல்டினால்யா கிராமத்தில் வெகு நேரமாக சுற்றித் திரிந்த புறாவைப் பார்த்த மக்கள் சந்தேகம் கொண்டு, அதுபற்றி கிராம அதிகாரியிடம் தெரிவித்தனர்.
கிராம அதிகாரிகளின் உதவியோடு பிடிக்கப்பட்ட அப்புறாவின் உடலில் உலோகத்தினால் ஆன வளையம் இருந்தது. அதில், '24311 டெல் அவி வுனியா இஸ்ரேல்' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது. இதனால், சந்தேகம் அடைந்த அந்நகர மக்கள் அப்புறாவினை எக்ஸ்ரே செய்து பார்த்தனர். அதில் வேறு எந்த உளவுக் கருவிகளும் அதன் உடலில் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்பது தெளிவானது.
அதனைத் தொடர்ந்து, நிம்மதிப் பெருமூச்சு விட்ட அந்நகர மக்கள், அப்பறவையை வனப்பகுதியில் பறக்க விட்டனர்.