4 ஆண்டுகளில் நாடுமுழுவதும் 555 போலி என்கவுண்டர்கள்... அதிர்ச்சித் தகவல்
டெல்லி: இந்தியாவில் 4 ஆண்டுகளில் 555 பேர் போலி ‘என்கவுண்டர்கள்' நடைபெற்றுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் பதிவு செய்துள்ளது. இதில் அதிக என்கவுண்டர்கள் உ.பியில்தான் நடைபெற்றுள்ளனவாம்.
குஜராத் மாநிலத்தில் இஷ்ரத் ஜகான் மற்றும் சதீக் ஜமால் ஆகியோரின் போலி என்கவுண்டர் சம்பவம் குறித்து சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ள நிலையில் தற்போது போலி எண்கவுண்டர்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
555 போலி என்கவுண்டர் வழக்குகளில் 144 வழக்குகளில் மட்டுமே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாம்.
555 என்கவுண்டர்கள்
இந்தியாவில் கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2013-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி வரை பாதுகாப்பு படைவீரர்கள், துணை பாதுகாப்பு படைவீரர்கள் மற்றும் போலீசாரால் 555 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
உத்தரபிரதேசம் நம்பர் 1
இதில் அதிகபட்சமாக உத்தர பிரதேச மாநிலத்தில் 138 போலி என்கவுண்டர் சம்பவங்கள் நடைபெற்றுள்ளனவாம்.
மாவோயிஸ்ட் மாநிலங்கள்
அஸ்ஸாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், சட்டீஸ்கர், ஒடீஸா ஆகிய மாநிலங்கள் முதல் 10 இடங்களுக்குள் உள்ளன. இவை மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களாகும்.
மணிப்பூர் – அஸ்ஸாம்
மணிப்பூர் மாநிலத்தில் 62 என்கவுண்டர்களும், அஸ்ஸாம் மாநிலத்தில் 52 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. மேற்கு வங்கத்தில் 35, ஜார்கண்ட் மாநிலத்தில் 30 என்கவுண்டரும் ஒடீஸாவில் 27 சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.
தமிழ்நாட்டில் 23
இந்த மாநிலங்கள் தவிர ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 26 என்கவுண்டர் சம்பவங்களும், தமிழ்நாட்டில் 23 என்கவுண்டரும் ம.பியில் 20 என்கவுண்டர்களும் நிகழ்த்தப்பட்டுள்ளனவாம்.
காஷ்மீரில் அதிகம்
கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீரில் அதிக அளவில் போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாம்.
2011-12ல் 197 என்கவுண்டர்
கடந்த 2011-12ம் ஆண்டு மட்டும் 197 போலி என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளன. இதுதான் அதிக அளவு.அதேசமயம் 2009-10ல் 103 போலி என்கவுண்டர்களும், 2010-11ல் 129ம் நிகழ்த்தப்பட்டுள்ளன.
தேசிய மனித உரிமைக் கமிஷன்
போலி என்கவுண்டர் தொடர்பான பெரும்பாலான வழக்குகள் தேசிய மனித உரிமைக்கமிஷனின் தலையீட்டின் காரணமாகவே பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏசியன் சென்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸ் இயக்குநர் சுஹாஸ் சக்மா தெரிவித்துள்ளார்.