தெலுங்கானா எதிரொலி- கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி 72 மணி நேர பந்த்
மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங்கை சுற்றிய மலைப் பகுதிகளை ஒருங்கிணைத்து கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. கடந்த 20 ஆண்டுகாலமாக நீடித்து வருகிறது இக்கோரிக்கை. இதற்கான போராட்டத்தில் பலரும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவகாரத்துக்கு தீர்வு காணும் முதல் முயற்சியாக 1980களின் இறுதியில் கூர்க்கா ஹில் கவுன்சில் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் கடந்த 2011ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில அரசு, மத்திய அரசு மற்றும் கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா ஆகியவை இணைந்து முந்தைய ஹில் கவுன்சிலை விட கூடுதல் அதிகாரம் கொண்ட ஜிடிஏ எனப்படும் கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக அமைப்பை உருவாக்கின. அதுதான் தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது.
இந்நிலையில்தான் ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா உருவாக்கப்பட இருக்கும் செய்திகள் வெளியாகின. தெலுங்கானா உருவாக்குவது நியாயம் எனில் கூர்க்காலாந்தையும் தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூர்க்காலாந்து ஜன்முக்தி மோர்ச்சா இன்று முதல் 3 நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.
இதைத் தொடர்ந்து கூர்க்காலாந்து பகுதியில் அனைத்து சந்தைகளும் மூடப்பட்டுள்ளன. கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சிலிகுரியில் இருந்து டார்ஜிலிங் செல்லும் வாகனங்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பமாக இருக்கிறது. இன்றைய முழு அடைப்பின் போது கடைகளை மூட கட்டாயப்படுத்தியதாக 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.